சென்னை; சென்னை விமான நிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழகத்தில் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் கூட்டுத் தொடர் போராட்டத்தை வரும் 4ம் தேதி நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். அவர்கள் போராட்டத்தில் இறங்குவதற்கு முன்னதாக அவர்களுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டும். போராடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும். அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் அரசின் நிர்வாகமே ஸ்தம்பித்துவிடும். தமிழ்நாட்டில் கஜா புயல் நிவாரணத்துக்கு மத்திய அரசு ஒதுக்கி உள்ளது. ₹350 கோடியை வைத்துக்கொண்டு எந்த நிவாரணப்பணிகளையும் செய்யமுடியாது. மத்திய அரசு ஒதுக்கியபணம் போதாது ₹5000 கோடி நிதி ஒதுக்க வேண்டும்.
மத்திய அரசு எல்லா மாநிலங்களுக்கும் பொதுவான நடுநிலையான அரசாக இருக்க வேண்டுமே தவிர ஒருதலைப்பட்சமாக செயல்பட கூடாது. தமிழிசை கூறுவதுபோல் மாநிலங்களிடையே பேசி நடவடிக்கை எடுத்துக் கொள்ளலாம் என்றால் மத்திய அரசு என்ற ஒன்று தேவையே இல்லையே. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, காவிரி ஆற்றில் ஓடுகின்ற தண்ணீரை யாரும் தடுத்து நிறுத்தி அணைகட்ட கூடாது என்ற உத்தரவு உள்ளது. அந்த உத்தரவை மீறி மத்திய அரசு ஒருதலைபட்சமாக முடிவெடுத்து மேகதாது அணை கட்ட அனுமதி அளித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. எனவே தான் திமுக தலைமையில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள், மதிமுக உட்பட 9 கட்சிகள் ஒன்றாக இணைந்து திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த இருக்கிறோம்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி