சென்னை: கொளத்தூர் தொகுதிக்கு சென்ற மு.க.ஸ்டாலின் அங்குள்ள பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்தார். திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று கொளத்தூர் ெதாகுதிக்கு சென்றார். அங்கு பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். பந்தர் கார்டன் சென்னை மேல்நிலைப்பள்ளியில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி வைத்து, பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டுவதற்கான இடத்தை பார்வையிட்டார். 400 மீட்டர் தடகள போட்டியில் மாநில அளவில் 2ம் இடம் பெற்று தேசிய அளவிலான போட்டியில் கலந்துகொள்ளும் மாணவன் ரூபகாந்தன் பயிற்சி மேற்கொள்வதற்கு நிதி உதவி வழங்கினார்.
மார்க்கெட் தெருவில் உள்ள சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு 1500 புத்தகம், 1125 மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், ஜாமென்ட்ரி பாக்ஸ் போன்ற கல்வி உபகரணங்களை வழங்கினார். சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ₹ 82 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும் வார்டு எண் 64 ஹரிதாஸ் தெரு தாமரை குளத்தை ஆய்வு செய்தார். பிறகு வார்டு 66ல் பள்ளி, கல்லூரி மற்றும் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் மாணவ, மாணவிகள் 5 பேருக்கு லேப்டாப், மருத்துவ உதவித்தொகை, கல்வி உதவித்தொகை மற்றும் ஏழைகள் 5 பேருக்கு இஸ்திரிபெட்டி, 5 பேருக்கு தள்ளுவண்டி, 5 பேருக்கு தையல் இயந்திரம், 20 பேருக்கு புடவை, 6 மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சக்கர சைக்கிள், மூக்கு கண்ணாடி மற்றும் 1500 மரக்கன்றுகளை மு.க.ஸ்டாலின் வழங்கினார். லூர்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, சென்னை உயர்நிலைப்பள்ளி, மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஜி.கே.எம் காலனி சென்னை மேல்நிலைப்பள்ளி, மதுரை தெரு சென்னை நடுநிலைப்பள்ளி உள்ளிட்ட அரசு பள்ளிகளுக்கு 100க்கு மேற்பட்ட பூ செடிகள் வழங்கினார். அப்போது, வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் சேகர்பாபு எம்எல்ஏ, ப. ரங்கநாதன் எம்எல்ஏ மற்றும் ஐ.சி.எப். முரளி, நாகராஜ் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி