புதுடெல்லி: கார்கள், இதர வாகனங்களில் ஓட்டப்படும் ஸ்டிக்கர்களை அகற்ற கோரி தாக்கல் செய்த பொதுநலன் மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. போக்குவரத்து போலீசார் மற்றும் பாதுகாப்பு அமைப்புக்களை ஏமாற்றும் நோக்கத்தில், கார்கள் மற்றும் பல்வேறு வாகனங்களில் சிலர் (பிரஸ், போலீஸ், வக்கீல், ஆர்மி ) என்ற பெயரில் போலி ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர். இந்த போலி ஸ்டிக்கர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் மற்றும் 15 ஆண்டுகள் முடிந்த வாகனங்களை தடை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி கே.ராஜன் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநலன் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதி எஸ்கே கவுல் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ அங்கீகரிக்கப்படாத ஸ்டிக்கர்களை அகற்ற வேண்டும் என நீதிமன்றம் ஒருவேளை உத்தரவிட்டால் இதனை நடைமுறைப்படுத்தப் போவது யார்? ஸ்டிக்கர்கள் போலியானவையா, உண்மையானவையா என யார் ஆய்வு செய்வார்கள்? இதை சரிபார்ப்பது நீதிமன்றத்தின் வேலையா?’’ என்று கேள்வி எழுப்பினார்கள். பின்னர் இந்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி