×

உளுந்தூர்பேட்டை பகுதியில் துணிகரம் : ஒரே நாளில் 2 கோயில்களில் உண்டியல் பணம் கொள்ளை

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை மற்றும் கெடிலத்தில் 2 கோயில்களை உடைத்து உண்டியல் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச்சென்றனர்.  இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை பேரூராட்சி சரஸ்வதி நகர் பகுதியில் வரசித்தி விநாயகர் கோயில் உள்ளது. இங்கு வழக்கம்போல் நேற்றிரவு பூஜைகள் முடிந்ததும் பூசாரி கோயிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். இன்று காலை கோயிலை திறக்க அவர் வந்தபோது கோயிலின் முன்பக்க பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்ததும் பூசாரி மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது கோயிலின் உள்ளே இருந்த உண்டியல் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது.

உண்டியலில் இருந்த சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்றுள்ளனர். பீரோவில் ஏதாவது விலை உயர்ந்த பொருட்கள் இருக்குமா என மர்ம நபர்கள் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் எதிர்பார்த்தபடி எதுவும் இல்லாததால் மர்மநபர்கள் உண்டியலை மட்டும் உடைத்து பணத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி உளுந்தூர்பேட்டை போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: இதேபோல் கெடிலம் ஓம்சக்தி கோயிலிலும் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச்சென்று விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு ரூ.10 ஆயிரம் இருக்கும் என தெரிகிறது. சம்பவம் குறித்து திருநாவலூர் போலீசார் விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே நாளில் 2 கோயில்களில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்துச்சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : area , emple, robbery, mystery persons
× RELATED ராட்சத அலையில் சிக்கியவர் பலி