பெய்ஜிங் : உலகளவில் சர்ச்சை எழுந்ததை அடுத்து கருவில் மரபணுக்களை மாற்றி அமைத்து குழந்தைகளை பிறக்க வைக்கும் ஆராய்ச்சியை நிறுத்தி விட்டதாக சீன விஞ்ஞானி தெரிவித்துள்ளார். சீனாவில் பிறக்கும் குழந்தையின் மரபணுவை மாற்றி சர்ச்சையில் சிக்கி இருக்கிறார் Jiankui என்ற பேராசிரியர். எச்ஐவி பாதிக்கப்பட்ட தந்தைக்கு பிறந்த இரட்டை பெண் குழந்தைகளும் அந்த நோயால் பாதிக்கப்பட கூடாது என்பதற்காக கருவிலேயே மரபணுக்களை மாற்றம் செய்திருக்கிறார் Jiankui. க்ரிஸ்பர் முறையில் மரபணுக்களை மாற்றவோ அகற்றவோ முடியும் என்பதால் அந்த முறையை பயன்படுத்தி இரட்டை குழந்தைகள் கருத்தரித்த முட்டையில் மரபணு மாற்றம் செய்ததாக தெரிவிக்கிறார் Jiankui.
ஜீன் எடிட்டிங் மூலம் அந்த கருவில் மரபணு மாற்றம் செய்து 2 குழந்தைகளை பிறக்க வைத்துள்ளார் Jiankui. எச்ஐவி நோய் பாதித்த தந்தையால் அந்த கருக்கள் உண்டானதால் எச்ஐவி பாதிப்பு ஏற்படுவதை தடுக்கும் வகையில் மரபணுக்கள் நீக்கப்பட்டதாக தெரிவிக்கிறார் Jiankui. கொடிய வைரஸ் நோய்களின் தாக்கத்தை பிறவியிலேயே தாங்கிக் கொள்ளும் சக்தியை உருவாக்குவதே தனது குறிக்கோள் என்றும் அதற்காகவே கருவில் மரபணு மாற்றி குழந்தைகளை பிறக்க வைப்பதற்காக 8 தம்பதியினருக்கு வாக்குறுதி அளித்ததாகவும் Jiankui கூறியிருக்கிறார்.
அந்த 8 தம்பதிகளில் சிலருக்கு எச்ஐவி தொற்றும் இருப்பதாக தெரியவந்துள்ளது. Jiankui கண்டுபிடித்திற்கும் இந்த முறை ஜீன் எடிட்டிங் என்று சொல்லப்படுகிறது. அவரது செய்முறை காணொளி அண்மையில் உலகம் முழுவதும் வெளியானதால் மருத்துவத்துறையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மனித கருவில் மரபணு மாற்றம் செய்தது மிகப்பெரிய தவறு என்று சீனா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதைத் தொடர்ந்து கருவில் மரபணு மாற்றி குழந்தை பிறக்கவைக்கும் ஆராய்ச்சியை நிறுத்திவிட்டதாகவும் இதற்காக மன்னிப்பு கேட்டு கொள்வதாகவும் Jiankui அறிவித்திருக்கிறார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி