நாகை: கஜா புயலால் இருளில் மூழ்கியுள்ள கிராமங்களுக்கு 10,000 சிறிய விளக்குகளை இலவசமாக வழங்கும் வகையில் தீவிரமாக பணியாற்றி வருகிறது தரங்கம்பாடியை சேர்ந்த தொண்டு நிறுவனம். கஜா புயலால் டெல்டா மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். சுழன்று அடித்த புயல் மின்கம்பங்களை தூக்கி வீசிய நிலையில் வீடுகள் இருளில் மூழ்கியுள்ளன. மின் விநியோகத்தை சீர் அமைப்பதற்காக அரசு தீவிர களப்பணியாற்றி வரும் நிலையில் தரங்கம்பாடியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் பேட்டரியில் இயங்கும் சிறிய அளவிலான விளக்குகளை தயாரித்து வருகிறது.
ஹய் டெக் நிறுவனமும், அமெரிக்க தமிழியம் என்ற அமைப்பும் முதற்கட்டமாக 1000 விளக்குகளை வழங்கியுள்ள நிலையில் மேலும் 10,000 விளக்குகளை தயாரித்து வருகின்றனர். எமெர்ஜென்சி விளக்குகளை விட எல்.இ.டி விளக்குகள் பாதுகாப்பானது, பயனுள்ளது என்று கூறுகின்றனர் உற்பத்தியாளர்கள். கஜா புயலால் இருளில் மூழ்கியுள்ள மக்களுக்கு ஒளியேற்றும் இந்த பணியில் பல தன்னார்வ இளைஞர்களும் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு விளக்குகளை விநியோகிப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும் என தன்னார்வ தொண்டு நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி