×

ஒருதலைக்காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை : ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: ஒருதலைக்காதல் கொலைகளை தடுக்க கடுமையான சட்டம் தேவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: நெல்லை மாவட்டம் வள்ளியூரில் தனியார் துணிக்கடையில் வேலை செய்தமெர்சி என்ற இளம்பெண் காதலிக்க மறுத்ததால் ரவீந்திரன் என்ற வாலிபரால் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். ஒருதலைக்காதல் என்ற பெயரில் பெண்களுக்கு எதிராக அரங்கேற்றப்படும் இத்தகைய வெறிச்செயல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மெர்சியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.படுகொலை செய்யப்படும் அளவுக்கு மெர்சி எந்தக் குற்றத்தையும், பாவத்தையும் இழைக்கவில்லை. இத்தகைய கொடூரங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பெற்றோர்கள் தங்களின் பெண்களை படிக்கவோ, பணிக்கோ அனுப்பத் தயங்குகின்றனர். ‘‘பெண்களுக்கென்று எந்த விருப்பமும் இருக்கக்கூடாது. அவர்களிடம் காதலைச் சொன்னால் உடனே ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால், அந்தப் பெண்கள் வாழத் தகுதியற்றவர்கள். கொடூரமான படுகொலை செய்யப்பட வேண்டியவர்கள்’’ என்ற மனநோய் அண்மைக்காலமாக இளைஞர்களிடம் அதிகரித்து வருகிறது.

பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் என பெண்கள் அதிகம் கூடும் பகுதிகளில் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் மகளிர் மட்டும் பேருந்துகளை அதிக எண்ணிக்கையில் இயக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் வழியில் பின்தொடர்ந்து வந்து தொல்லை கொடுத்தல், கல்வி நிறுவனங்கள் மற்றும் பணியிடங்களுக்கு பெண்கள் செல்லும் வழியில் கூடி நின்று, அருவருக்கத்தக்க வகையிலான செய்கைகளை செய்தல், பேருந்துகளில் தொல்லை கொடுத்தல் என்று பெண்களுக்கு எதிராக, பெண்களை மதிக்கத்தெரியாத கும்பல் செய்யும் அட்டகாசங்கள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. எனவே, ஒருதலைக்காதல் கொலைகளை முற்றிலுமாக கட்டுப்படுத்தும் வகையில் கடுமையாகச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும். பெண்களுக்கு எதிரான சீண்டல்களில் தொடர்ந்து ஈடுபடும் கும்பல்கள் மீதும் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : killings ,Ramadoss , Need a harsh ,law to prevent unilateral killings,Ramadoss's assertion
× RELATED வெந்நீரை கொட்டினா மாதிரி கொதிக்குது...