மன்னார்குடி: வடுவூர் அருகே அரசு துவக்கப்பள்ளியின் மேற்கூரை சிமெண்ட் காரை இடிந்து விழுந்தது. வகுப்பறையை ஆசிரியர் மாற்றியதால் மாணவர்கள் தப்பினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அடுத்த வடுவூர் சாத்தனூர் கிராமத்தில் அரசினர் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 70 மாணவர்கள் படித்து வருகின்றனர். கஜா புயலால் பள்ளி வளாகம் முழுவதும் மரங்கள் சாய்ந்தன. இதனால் இப்பள்ளிக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டது. விடுமுறைக்கு பின் பள்ளி நேற்று முன்தினம் முதல் செயல்பட துவங்கியது. நேற்று காலை வழக்கம்போல் மாணவர்கள் பள்ளிக்கு வந்தனர்.
2-ம் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் இருந்தனர். வகுப்பறையின் மேற்கூரை பெயர்ந்து இருந்ததை கண்ட ஆசிரியர், மாணவ மாணவியரை வேறு வகுப்பறைக்கு அனுப்பி வைத்தார். மாணவர்கள் வேறு அறைக்கு சென்ற சிறிது நேரத்தில் யாரும் எதிர்பாராத நிலையில் சேதமடைந்து இருந்த வகுப்பறையின் மேற்கூரை திடீரென பலத்த சத்தத்துடன் இடிந்து விழுந்தது. அப்போது அந்த வகுப்பறையில் மாணவர்கள் இல்லாததால் அதிர்ஷ்டவசமாக பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி