புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் வடக்கு கிராமத்தில் சுற்றிலும் புதர்ச் செடிகள் சூழ, அதன் நடுவில் படர்ந்து விரிந்த ஆலமரம் உள்ளது. பல ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலமரத்தின் கிளைகள் அனைத்திலும் ஆயிரக்கணக்கான பழம் தின்னி வவ்வால்கள் தங்கி இருந்தன. ஆலமரத்தின் அடியில் வெள்ளையப்பன் என்னும் அய்யனார் கோயில் உள்ளது. இந்த மரத்தில் இருந்து விழும் ஒரு குச்சியைக்கூட இப்பகுதியினர் விறகுக்கு பயன்படுத்துவது இல்லை. இங்கிருந்து இரை தேடி எவ்வளவு தொலைவுக்கு வவ்வால்கள் சென்றாலும் மீண்டும் இரவில் இந்த இடத்துக்கு வந்து விடுவது வழக்கம். அதிகாலையில் இவை எழுப்பும் சப்தத்தை கேட்டுதான் கிராமமே எழும். இந்த வவ்வால்களின் நலன் கருதி சுற்று வட்டார பகுதிகளில் பட்டாசுகளை வெடிப்தையே பொதுமக்கள் முற்றிலுமாக தவிர்த்துவிட்டனர்.
இந்நிலையில் புயல் தாக்குதலால் இந்த ஆலமரத்தின் பெரும்பாலான கிளைகள் முறிந்துவிட்டன. புயல் காற்றால் 50 சதவீதம் வவ்வால்கள் இந்தமரத்திலிருந்து வேறு வேறு பகுதிகளுக்கு சென்றுவிட்ட நிலையில் மீதமிருந்த வவ்வால்கள் இறந்துவிட்டன. இந்நிலையில் இயல்பு நிலை திரும்பியதையடுத்து பல்வேறு திசைகளில் பறந்துசென்ற வவ்வால்கள் மீண்டும் இந்த ஆல மரத்துக்கு திரும்பத் தொடங்கின. இந்த எஞ்சியுள்ள கிளைகளிலும், குச்சிகளிலும் தங்கி உள்ளன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், கஜா புயலில் பாதி வவ்வால்கள் இறந்து மரத்தடியிலேயே விழுந்துவிடடன. ஏராளமான வவ்வால்கள் இடம்பெயர்ந்துவிட்டன. அப்படி சென்ற வவ்வால்கள் சில நாட்கள் எங்கோ இருந்து விட்டு தற்போது மீண்டும் நெடுவாசல் ஆலமரத்துக்கே வந்துவிட்டன. இதனால் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி