சென்னை: சென்னையில் புதியதாக அமைக்கப்பட்ட 437 சிசிடிவி கேமராக்கள் செயல்பாட்டை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் தொடங்கி வைத்துள்ளார். 9.5 கி.மீ தூரத்துக்கு அமைக்கப்பட்ட சிசிடிவி கேமராக்கள் செயற்பாட்டை அவர் இன்று துவக்கி வைத்துள்ளார். இந்நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தலைநகர் சென்னையின் முக்கிய சாலைகள் அனைத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக கூறினார். 50 மீட்டருக்கு ஒரு சிசிடிவி கேமரா பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார். சமீபத்தில் நடைபெற்ற குற்றங்கள் பலவற்றிலும் சிசிடிவி மூலமே துப்பு கிடைத்துள்ளது. இது காவல்துறைக்கு பெரும் உதவியாக இருந்தது என்றார். எனவே சென்னை பெருநகர் முழுவதையுமே கண்காணிப்பு கேமராவின் வளையத்திற்குள் கொண்டு வர தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி சென்னையில் 60 சதவீத இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சென்னை முத்துசாமி பாலத்திலிருந்து - கோயம்பேடு வரை 437 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறினார். கீழ்பாக்கம், அண்ணா வளைவு பகுதிகளில் சிசிடிவி கட்டுப்பாட்டு அறை செயல்படும் என்றார். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதால் அனைத்து விதமான குற்றங்களும் குறைந்துள்ளதாக தெரிவித்தார். குற்றங்களை கண்டுபிடிப்பதற்கும், போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது என்றார். பணியில் உள்ள காவலர்கள் யார் தவறு செய்தாலும் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி