மண்டியா: நடிகை ரம்யா, தனக்கு முள்ளந்தண்டு நோய் இருப்பதாக டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார். கர்நாடகாவைச் சேர்ந்த நடிகை ரம்யா இறந்துவிட்டதுபோல சித்தரித்து, இதய அஞ்சலி என்று அச்சிடப்பட்ட போஸ்டர்கள் மண்டியாவில் ஊர் முழுவதும் ஒட்டப்பட்டுள்ளன. மறைந்த நடிகரும் முன்னாள் அமைச்சருமான அம்பரீஷின் ரசிகர்கள் இதுபோன்ற போஸ்டர்களை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. அம்பரீஷுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் நடிகை ரம்யா பங்கேற்கவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.
காங்கிரஸ் கட்சியில் இணைந்து ரம்யா செயல்பட காரணமாக இருந்தவர் அம்பரீஷ். அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்காதது ஏன் என்பது குறித்து விளக்கமளிக்க வேண்டும் என்று ரம்யாவுக்கு தொண்டர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இந்நிலையில் ரம்யாவுக்கு இதய அஞ்சலி என்ற போஸ்டர் குழப்பத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் இந்த படம் வைரலாகியது. எப்பொழுதும் ரம்யா பிசியாகவே இருக்கின்றார். ஓட்டுபோடவும் வரவில்லை. அம்பரிஷின் இறுதி நிகழ்ச்சியிலும் அவர் கலந்துகொள்ள வரவில்லை. இதனால் ஏற்பட்ட விரக்தியில் ரசிகர்கள் இவ்வாறு கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்நிலையில் ரம்யா இன்ஸ்ட்டாகிராமில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் தனது காலில் ஆஸ்டியோபிளாஸ்டோமா என்ற எலும்பு சார்ந்த முள்ளந்தண்டு நோய் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு காலில் சிகிச்சை மேற்கொண்டு கட்டுப்போடப்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன் கீழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு குறிப்பும் எழுதியிருந்தார். அதில் கூறியிருப்பதாவது:‘’கடந்த அக்டோபர் மாதம் முதல் நான் ஆஸ்டியோபிளாஸ்டோமா நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன். இதற்காக சிகிச்சை பெற்று வருகின்றேன்.
பாத எலும்புகளில் வலி கடுமையாக உள்ளது. அடுத்த சில வாரங்களில் வலி கொஞ்சம் கொஞ்சமாக குறையும். இதை அலட்சியப்படுத்தினால் எலும்பு சார்ந்த புற்றுநோய் வர வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் கூறினார்கள். எனவே உடனடியாக சிகிச்சை எடுத்து வருகின்றேன். இது போன்ற பிரச்னை பெரும்பாலான பெண்களுக்கு ஏற்படுகின்றது. இது எனக்கு மிகப்பெரிய பாடம். நான் அலட்சியமாக இருந்ததால் இந்த வகையான நோய்க்கு ஆளாகி இருக்கின்றேன். எனவே நீங்கள் (பெண்கள்) பாதுகாப்பாக இருங்கள். எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். என்னைப்போல அலட்சியமாக இருக்காதீர்கள்’’ என்ற தகவலையும் அவர் பகிர்ந்துள்ளார்.
மேலும், நடிகர் அம்பரீஷ் மறைவுக்கு அனுதாபம் தெரிவித்து டிவிட்டர் பதிவையும் ரம்யா வெளியிட்டுள்ளார். அதில், ‘அம்பரீஷ் மறைவு செய்தி மிகவும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல். அவரை எனக்கு எப்போதும் பிடிக்கும். எப்போதும் என் மனதில் நீங்கா நினைவுகளாக இருப்பார்’ என்று பதிவிட்டிருந்தார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி