தென்காசி: இந்த ஆண்டு குற்றாலம் சீசன் அருமையாக இருந்தது. சீசன் காலத்தில் பெரும்பாலான நாட்கள் சாரலும், அருவிகளில் தண்ணீரும் நன்றாக விழுந்தது. புரட்டாசி, ஐப்பசி மாதங்களிலும் அருவிகளில் ஓரளவு தண்ணீர் விழுந்தது. ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் குற்றாலத்தில் ஐயப்ப சீசன் காலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த சமயத்தில் கார்த்திகை மற்றும் மார்கழி மாதங்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலத்திற்கு வந்து செல்வது வழக்கம். எனவே குற்றாலம் சீசன் காலத்தை போன்றே ஐயப்ப சீசன் காலத்திலும் கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கடைகள், கார் பார்க்கிங் கட்டண வசூல் உரிமம் ஆகியவை ஏலம் விடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு சீசன் நன்றாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் கடைகள் அதிக தொகைக்கு ஏலம் போனது.
ஆனால் எதிர்பாராதவிதமாக இந்த ஆண்டு தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களை கஜா புயல் புரட்டி போட்ட காரணத்தாலும், சபரிமலையில் இளம்பெண்களையும் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிப்பது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பையடுத்து அங்கு உருவான அசாதாரண சூழல் காரணமாகவும் குற்றாலத்திற்கு ஐயப்ப பக்தர்களின் வருகை வெகுவாக குறைந்து காணப்படுகிறது. பொதுவாக பகல் வேளைகளை விட மாலை மற்றும் இரவு வேளைகளிலேயே அதிக அளவில் ஐயப்ப பக்தர்கள் வருவது வழக்கமாக இருந்தபோதும் இந்த ஆண்டு இரவு வேளைகளிலும் பக்தர்கள் வருகை குறைந்து காணப்படுகிறது. பகலில் வெகு சிலரே அருவியில் குளிக்கும் நிலை உள்ளது. இதனால் அதிக தொகைக்கு தற்காலிக கடைகளை ஏலம் எடுத்தவர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி