சென்னை: வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் கைதாகி புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இளவரசியின் உறவினர் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துமவனையில் இறந்தார். சென்னை அண்ணா நகர் 17வது தெருவை சேர்ந்தவர் சிட்டி ராஜா (49). இவர், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, கடந்த ஆக. 24ம் தேதி, கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், புழல் சிறையில் இருந்த சிட்டி ராஜாவுக்கு திடீரென மூச்சு திணறல், மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால் கடந்த 24ம் தேதி மூச்சுத்திணறல் அதிகமானதால், சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலையில் சிட்டி ராஜா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஜெயிலர் உதயகுமார், புழல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இறந்த சிட்டி ராஜா, சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரூவில் சிறை தண்டனை பெற்று வரும் இளவரசியின் சம்பந்தி பாஸ்கரின் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி