காரியாபட்டி: காரியாபட்டி அருகே அரசகுளத்தில் கிராம மக்கள் சொந்த செலவில் வரத்து கால்வாயை தூர் வாரி வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே அரசகுளம் கிராமத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றன. கண்மாய் தண்ணீர் மூலம் விவசாயம் செய்து வந்த நிலையில், வரத்து கால்வாய் தூர்ந்து போய் முள் செடிகளால் புதராக மாறியது. ஆவியூர் கண்மாயில் இருந்து தண்ணீர் வரும் வரத்து கால்வாயில் குரண்டி-ஆவியூர் சாலையில் தரைப்பாலம் அமைக்காமல் பேவர்பிளாக் பதித்து உயரமாக அமைத்து விட்டனர்.
மேலும் இப்பகுதியிலுள்ள தனியார் பள்ளி வரத்து கால்வாயை மறித்து பள்ளிக்கு விளையாட்டு திடல் மற்றும் நடைபாதை அமைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ளது. இதனால் அரசகுளம் கண்மாய்க்கு தண்ணீர் வருவதில் சிக்கல் எழுந்துள்ளது. ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை. இதனால் கிராம மக்கள் சொந்த ெசலவில் வரத்து கால்வாயை தூர் வாரி வருகின்றனர். தனியார் பள்ளி ஆக்கிரமிப்பை அகற்றி தூர் வார மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தப்படும் என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி