திருச்செங்கோடு: கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், மின் சீரமைப்பு பணிக்கு மட்டுமே ரூ.1,500 கோடி ேதவை, தமிழக அரசு முதற்கட்டமாக ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது என திருச்செங்கோட்டில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, மானுவகாட்டுப்பாளையத்தை சேர்ந்த மின்வாரிய ஊழியர் முருகேசன். இவர் கஜா புயல் தாக்கிய புதுக்கோட்டை மாவட்டத்தில், மின் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள சென்ற போது, மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். அவரது குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இந்நிலையில் நேற்று, முருகேசன் வீட்டிற்கு சென்ற மின்துறை அமைச்சர் தங்கமணி, முதற்கட்டமாக ரூ.2 லட்சத்திற்கான காசோலையை, அவரது தங்கை ரத்தினத்திடம் வழங்கி ஆறுதல் கூறினார். அப்போது அவர் அளித்த பேட்டி: அரசு அறிவித்தபடி முருகேசன் குடும்பத்திற்கு, மீதி ரூ.13 லட்சத்திற்கான காசோலை விரைவில் வழங்கப்படும்.
எதிர்பார்த்ததை விட அதிக மின்கம்பங்கள் சேதமாகி உள்ளதால், ஆந்திராவில் இருந்து மின்கம்பங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. ஆந்திரா, கர்நாடகாவில் இருந்து மின்வாரிய ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. டெல்டா மாவட்டங்களில், வயல்களில் கம்பங்கள் நடவேண்டி உள்ளது. இதனால் முழுமையாக மின்வினியோகத்தை சீரமைக்க ஒரு வாரம் தேவைப்படும். நிவாரண நிதியாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி கேட்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரூ.1500 கோடி வேண்டும் என்று முதல்வர் மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார். மின்வாரியத்திற்கே சுமார் ரூ.1500 கோடி தேவை. இந்நிலையில், மின்சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள மின் வாரியத்திற்கு தமிழக அரசு ரூ.200 கோடி ஒதுக்கி உள்ளது. சீரமைப்பு பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. இவ்வாறு அமைச்சர் தங்கமணி கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி