* போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
சென்னை: நடிகை காயத்ரி ரகுராம் குடிபோதையில் சொகுசு காரை தாறுமாறாக ஓட்டி வந்து போலீசிடம் சிக்கினார். இது குறித்து விசாரித்த போலீசாரிடம் கடும் வாக்குவாதத்தில் அவர் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரபல சினிமா நடன கலைஞர் ரகுராம் மகள் காயத்ரி ரகுராம்(34). நடிகையான இவர், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். சார்லி சாப்ளின் தமிழ் திரைப்படத்தின் மூலம் நடிகையாக சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு விசில், ஸ்டைல், வானம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அவரது தந்தை மறைவுக்கு பிறகு பல திரைப்படங்களில் நடன இயக்குநராக பணியாற்றி வந்தார். பிறகு திருமணம் முடிந்து வெளிநாட்டில் குடியேறினார். கணவருடன் ஏற்பட்ட தகராறில் விவாகரத்து பெற்று தற்போது சென்னையில் வசித்து வருகிறார். இதற்கிடையே பாஜவில் இணைந்த அவருக்கு தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டது. தற்போது அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார். இந்நிலையில் ேநற்று முன்தினம் இரவு சென்னை எம்.ஆர்.சி.நகரில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் வீக் எண்ட் பார்ட்டி நடந்தது. இதில் திரைப்பட நடிகர், நடிகைகளும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். அந்த நிகழ்ச்சியில் காயத்ரி ரகுராமும் கலந்து கொண்டார். இந்நிலையில் வழக்கம்போல, போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் சத்யா ஸ்டுடியோ அருகே நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12 மணிக்கு வெள்ளை கலர் சொகுசு கார் ஒன்று அடையாறு நோக்கி சாலையில் அசுர வேகத்தில் தாறுமாறாக வந்தது. அதை பார்த்த போலீசார் சொகுசு காரை வழிமறித்து தடுத்து நிறுத்தினர்.
அப்போது சொகுசு காரை ஓட்டி வந்தவர் காயத்ரி ரகுராம் என்பது தெரிந்தது. கார் கண்ணாடியை கீழே இறக்கியதும் மது வாடை வீசியது. உடனே போலீசார் ‘மேடம் கீழே இறங்குங்கள்’ என்று கூறினர். அப்போது அவர், ‘நான் இறங்க முடியாது, உங்களுக்கு என்ன வேண்டும். நான் யார் என்று உங்களுக்கு தெரியாதா. அப்புறம் ஏன் என்னை காரில் இருந்து கீழே இறங்குங்கள் என்று கூறுகிறீர்கள்’ என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். உடனே போலீசார் ‘மேடம் நீங்கள் போதையில் இருக்கிறீர்களா’ என்று கேட்டு, போதை பரிசோதனை கருவியில் மூச்சு காற்றை ஊதும்படி கூறினர். அதற்கு அவர் போலீசாரை திட்டியபடி போதை பரிசோதனை கருவியில் ஊதினார். அதில் அவர் மது குடித்திருப்பது உறுதியானது. உடனே போலீசார் அவரிடம் காரை விட்டு இறங்குங்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர் நான் குடிக்கவில்லை நீங்கள் தான் குடித்துவிட்டு பணியில் இருக்கிறீர்கள் என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது போலீஸ்காரர் போதை பரிசோதனை கருவியில் தனது மூச்சு காற்றை ஊதி காட்டினார். இப்போது சொல்லுங்கள் யார் குடித்துள்ளது என்று காயத்ரி ரகுராமிடம் போலீசார் கேட்டனர். அதற்கு அவர் குடித்துள்ளதை ஒப்புக்கொண்டார். பின்னர் அரைமணி நேரம் போராட்டத்திற்கு பிறகு போதையில் இருந்த காயத்ரி ரகுராமை குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக வழக்கு பதிவு செய்து ரூ.2,500 அபராதத்திற்கான ரசீதை கொடுத்தனர். பிறகு போலீஸ் இன்ஸ்பெக்டர், நீங்கள் கார் ஓட்ட வேண்டாம் என்று கூறி காவலரை காரை ஓட்டி சென்று வீட்டில் விட்டுவிட்டு வருமாறு உடன் அனுப்பினர். இந்த சம்பவத்தால் அடையாறு சத்யா ஸ்டுடியோ அருகே நள்ளிரவு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி