தாம்பரம்: தாம்பரம் அருகே சேலையூர்-அகரம் தென் பிரதான சாலையில் உயிர் பலி வாங்கும் சிறு பாலம் பணியால் அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.தாம்பரம் அடுத்த சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில், திருவஞ்சேரி பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மழைநீர் செல்வதற்காக பள்ளம் தோண்டப்பட்டு அங்கு சிறு பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டது. பின்னர், அந்த பணிகள் திடீர் என கிடப்பில் போடப்பட்டது. இந்த பணி கிடப்பில் போடப்பட்டதால் சேலையூர் - அகரம் தென் பிரதான சாலையில் இரவு நேரங்களில் செல்லும் வாகன ஓட்டிகள் கிடப்பில் போடப்பட்டுள்ள சிறு பாலத்தில் சிக்கி விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.சேலையூர் - அகரம் தென் பிரதானசாலையில் பல ஆண்டுகளுக்கு முன் மின்விளக்கு வசதிகள் இல்லாததால் அந்த சாலை முழுவதும் இரவு நேரங்களில் இருளில் மூழ்கி காணப்படும். மேலும், அந்த சாலையில் தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று அரசு மதுபான கடைகள் உள்ளதால் குடிமகன்கள் அங்கு மது அருந்திவிட்டு மதுபோதையில் இருசக்கர வாகனங்களில் அசுர வேகத்தில் சென்று வருகின்றனர். இதனால் அவர்கள் சிறு பாலம் கட்டும் பணி நடைபெறுவது தெரியாமல், அதில் சிக்கி காயமடைந்து செல்கின்றனர்.
கடந்த 11ம் தேதி நள்ளிரவு கல்லூரி மாணவர்கள் இருவர் அகரம் தென் பிரதான சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, கிடப்பில் போடப்பட்டிருந்த சிறு பாலத்தில் சிக்கி கீழே விழுந்தனர். இதில், பைக்கின் பின்னால் அமர்ந்து இருந்த வாலிபர் பள்ளத்தில் தேங்கி இருந்த நீரில் மூழ்கி உயிரிழந்தார். அவர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தது மறுநாள் காலை அவ்வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்தபோது தெரிந்தது. இந்த சம்பவம் நடைபெற்ற பின்னரும் அப்பகுதி பொதுமக்கள் சார்பில் சிறு பாலப் பணிகளை உடனடியாக முடிக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் அவர்கள் இதுகுறித்து எந்த ஒரு நடவடிக்கைகளும் எடுக்காமல் அலட்சியமாக இருந்து வருகின்றனர். இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். எனவே, இதுகுறித்து சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பகுதியில் கிடப்பில் உள்ள சிறு பாலப் பணிகளை உடனடியாக முடிக்கவேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி