×

மின் கம்பங்களை சரிசெய்யும் போது மின்சாரம் தாக்கி இறந்த 2 பேர் குடும்பத்துக்கு தலா ரூ.15 லட்சம், அரசு வேலை : முதல்வர் உத்தரவு

சென்னை: கஜா புயலின் தாக்கத்தினால் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணியில்  ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு பேர் குடும்பத்துக்கு  தலா ₹15 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும்  முதல்வர் எடப்பாடி உத்தரவிட்டுள்ளார்.இதுகுறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த 16ம் தேதி அதிகாலை கஜா புயல் நாகப்பட்டினம் மாவட்டம் அருகே 110 கி.மீ. வேகத்தில் கரையை கடந்தபோது, டெல்டா மாவட்டங்கள் உள்பட 12 மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்கு உள்ளாயின. புயலின் தாக்கத்தினால், கால்நடைகள், வீடுகள், பயிர்கள், மின்கம்பங்கள் பெருமளவில் சேதம் அடைந்தன.

புயலின் கடுமையான தாக்கத்தினால் 1,13,566 மின் கம்பங்கள், 1,082 மின் மாற்றிகள், 194 துணை மின் நிலையங்கள் சேதமடைந்தன. இரவு பகல் பாராது, தங்கள் உயிரையும் துச்சம் என நினைத்து, சேதமடைந்த மின்மாற்றி மற்றும் மின்கம்பங்களை சீர் செய்யும் பணியில் சிறப்பாக ஈடுபட்டிருக்கும் 24,941 மின்வாரிய ஊழியர்களின் பணியினை மனதார பாராட்டுகிறேன், அவர்களது பணி மெச்சத்தக்கது.

நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் வட்டம், கோகூர் கிராமத்தைச் சேர்ந்த வயர்மேன் சண்முகம், 16ம் தேதி அன்று மின் கம்பங்களை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.20ம் தேதி புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் வட்டம், களமாவூர் கிராமத்தில் மின் கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த, நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் பலத்த காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி 23ம் தேதி உயிரிழந்தார்.கஜா புயலின் தாக்கத்தினால் சேதமடைந்த மின் கம்பங்களை சீர்செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். மின்சாரம் தாக்கி உயிரிழந்த சண்முகம் மற்றும் முருகேசன் ஆகியோரின் குடும்ப  நிலையை கருத்தில் கொண்டு, சிறப்பினமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து ₹13 லட்சமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக நிதியில் இருந்து ₹2 லட்சம் என மொத்தம் தலா ₹15 லட்சம் வழங்க  உத்தரவிட்டுள்ளேன். மேலும், உயிரிழந்த சண்முகம், முருகேசன் ஆகியோரின் குடும்பத்தினர் தலா ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு நிறுவனத்தில் வேலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் எடப்பாடி உத்தரவு:

நாடு முழுவதும் மவுன அஞ்சலி
மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை: நாகப்பட்டினம் மாவட்டத்தில் மின் சீரமைப்பு பணியில்  ஈடுபட்டிருந்த கீழ்வேலூரை சேர்ந்த கம்பியாளர் சண்முகம் (45), மின் கம்பத்திலிருந்து  கீழே விழுந்ததில், கடந்த 16ம் தேதி உயிரிழந்தார்.  அதேபோல், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த கம்பியாளர் சி.முருகேசன் (45), புதுக்கோட்டை மாவட்டத்தில் மின் கம்பி சீரமைக்கும் பணியின் போது கம்பத்தின் மேல் பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு மின்சாரம் பாய்ந்து திருச்சி மருத்துவமனையில்  சிகிச்சை பெற்று வந்தார். அவரும்  சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.  பணியாற்றும்போது விபத்துக்களில் உயிரிழந்த இந்த இரண்டு பணியாளர்களுக்கும் நாடு முழுவதும் உள்ள மின் பணியாளர்கள் மற்றும் புயல் பாதிப்பு பகுதிகளில் பணியாற்றும் மின் பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அனைவரும் இன்று (நேற்று) காலை தங்கள் பணியை துவக்கும் முன் இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தினர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : CM , Electricity, Rs.15 lakh, government job, CM order
× RELATED தமிழ்நாட்டில் 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சிவகாசியில் 7 செ.மீ. மழை பதிவு..!!