நாகர்கோவில்: எல்எச்பி ரயில் பெட்டிகளில் ஏசி இயக்க தனியாக பணியாளர் தேவையில்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளதால் இதற்காக நூற்றுக்கணக்கான பணியிடங்கள் ரத்து செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது நவீன வசதிகளை கொண்ட எல்எச்பி எனப்படும் ‘லிங்க் ஹாப்மேன் புஷ்’ என்ற வகை பெட்டிகளை கொண்ட ரயில்கள் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் பயணத்தின்போது ஏசி பெட்டிகளில் குளிரூட்டுத்தன்மையை மாற்றியமைக்க தேவையில்லை. புவியின் வெப்பத்தை கணக்கில் கொண்டு தானாகவே குளிரூட்டும் தன்மையை மாற்றிக்கொள்கின்ற தொழில்நுட்பம் இந்த வகையிலான ஏசிகள் இந்த வகை பெட்டிகளில் பொருத்தப்பட்டுள்ளன. ஏற்கனவே தற்போது பயன்பாட்டில் இருந்து வருகின்ற இந்தியன் கோச் பேக்டரி எனப்படும் ஐசிஎப் தயாரிப்பு பெட்டிகளில் இதுபோன்ற நிலை இல்லை. இந்த வகை ரயில் பெட்டிகளில் அறையின் வெப்பநிலைக்கு ஏற்ப பணியாளர் சென்று குளிர்ச்சி தன்மையை மாற்ற வேண்டியிருந்தது.
ரயில்கள் பல மாநிலங்களை கடந்து செல்லும்போதும், பகல், இரவு வேளைகளிலும் ஏசி பெட்டிக்குள் வெப்பநிலையை அவ்வப்போது மாற்ற வேண்டிய கட்டாயமும் இருந்து வந்தது. தற்போது எல்எச்பி பெட்டிகள் பயன்பாட்டிற்கு வர தொடங்கியுள்ள நிலையில் அதன் செயல்பாடுகளை கண்காணிக்க தனியே பணியாளர்கள் தேவையில்லை என்ற நிலைக்கு ரயில்வே வந்துள்ளது. சென்னை, மதுரை, திருவனந்தபுரம், கோட்டங்களில் சுமார் 500க்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதற்காக பணிபுரிந்து வருகின்றனர். பணியாளர்கள் தேவை எழாததால் இந்த பணியிடங்களை ரத்து செய்ய ரயில்வே திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏற்கனவே ஏசிக்களில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் பணிகள் பல கோட்டங்களிலும் தனியார் வசம் இருந்து வருகிறது. இருப்பினும் ரயில்வேயில் தனியார் மயத்தை அதிகரித்து வரும் நடவடிக்கைகளுக்கு தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு தெரிவிக்க தொடங்கியுள்ளன.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி