சென்னை : கஜா புயல் பாதித்த பகுதிகளில் ஈ, கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புயல் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு தலா ரூ.20 லட்சம் வீதம் மொத்தம் ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், புகையடிப்பான்கள் மூலம் புகை அடிக்கப்பட்டு கொசு ஒழிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். மேலும் 5,166 மருத்துவ முகாம்கள் மூலம் 3,27,444 நபர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். கஜா புயலின் தாக்கத்தால் இதுவரை 63 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் எண்ணற்ற மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில், அவற்றை அப்புறப்படுத்தும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமைச்சர் விஜயபாஸ்கர் ஈ, கொசுக்களை ஒழிக்க ரூ.1 கோடி ஒதுக்கியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக குப்பைகள் மற்றும் தண்ணீர் தேங்கும் இடங்களில் ஈக்கள் மற்றும் கொசுக்கள் உற்பத்தியாவதை தடுக்க, குழுக்கள் போடப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், புயல் பாதித்த மாவட்டங்களில் தொற்றுநோய் தடுப்புக் குழு, ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நடமாடும் மருத்துவ வாகனங்களில் பிளீச்சிங் பவுடர் பொட்டலங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும், அரை கிலோ பொட்டலங்களை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி