சென்னை: வேளாண்மை அலுவலர் பதவிக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வெளியிட்ட அறிவிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வேளாண்மை அலுவலர் (விரிவு) பதவிக்கான எழுத்து தேர்வை கடந்த ஜூலை 14ம் தேதி நடத்தியது. தொடர்ந்து கடந்த மாதம் 17ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்புக்கு தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 631 விண்ணப்பதாரர்களின் பதிவெண் விவரங்கள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்குத் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்ட 631 விண்ணப்பதாரர்கள் கடந்த மாதம் 29ம் தேதி முதல் கடந்த 9ம் தேதி வரை, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி நிறுவனத்தால் நடத்தப்படும் அரசு இ-சேவை மையங்களில் சான்றிதழ்களை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய கேட்டுக்கொள்ளப்பட்டனர். அவ்வாறு சான்றிதழ் சரிபார்ப்புக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்துள்ள, பதிவேற்றம் செய்யாத விண்ணப்பதாரர் பட்டியல் தேர்வாணைய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் வருகிற 27ம் தேதி வரை தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து அவர்கள் சான்றிதழ் பதிவேற்ற நிலை குறித்து தெரிந்துகொள்ளலாம்.
விண்ணப்பதாரர் களின் சான்றிதழ்கள் தேர்வாணையத்தால் பெறப்பட்டதனால் மட்டுமே அவர்கள் இந்த தெரிவுக்கு தகுதியானவர்களாக கருதப்பட மாட்டார்கள். சான்றிதழ் சரிபார்ப்புக்கு பின்னர் தரவரிசை மற்றும் இனசுழற்சியின் அடிப் படையில் நேர்முகத்தேர்விற்கு தகுதியானவர்களின் பட்டியல் தனியே வெளியிடப்படும். இது குறித்து சந்தேகங்கள் ஏதும் இருப்பின் 044-25300597 என்ற தொலைபேசி எண்ணில் வருகிற 26ம் தேதி, 27ம் தேதி காலை 10.30 முதல் மாலை 5.45 வரை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி