×

விசாகப்பட்டினம் மாவட்டம் அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா சாகுபடி: டிரோன் மூலம் கண்டுபிடிப்பு

திருமலை: விசாகப்பட்டினம் மாவட்டத்தில் அடர்ந்த வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டிருப்பதை டிரோன் கேமரா மூலம் ஆந்திர அரசு கண்டுபிடித்துள்ளது. ஆந்திராவின் அரக்கு வனப்பகுதியில் சட்டவிரோதமாக பயிரிடப்படும் கஞ்சா அங்கிருந்து கடத்தப்பட்டு இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. அரக்கு வனப்பகுதியில் விளைவிக்கப்படும் கஞ்சாவை பயிர் செய்வது, கடத்தலுக்கு தேவையான வாகனங்களை ஏற்பாடு செய்வது, வனப்பகுதியில் இருந்து கஞ்சாவை பாதுகாப்பாக கொண்டு வந்து வாகனங்களில் ஏற்றி நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைப்பது, அவற்றை மொத்தமாக வாங்கி சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்வது என்று பல்வேறு பணிகளில் மாபியா கும்பல் ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அரக்கு வனப்பகுதியில் நடைபெறும் கஞ்சா சாகுபடியை முற்றிலும் ஒழித்துக் கட்ட அரசு முடிவு செய்தது. ஆந்திர மாநில அரசு இதற்காக நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்த தொடங்கி உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநில அரசு செய்து வரும் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு சேவைகளை வழங்கி வரும் ரியல் டைம் கவர்னன்ஸ் மூலம் அரக்கு வனப்பகுதியில் கஞ்சா சாகுபடி செய்யப்பட்டுள்ள பகுதிகளை டிரோன் கேமராக்கள் மூலம் துல்லியமாக கண்டுபிடிக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

இதற்காக, அரக்கு வனப்பகுதியில் டிரோன் கேமராக்கள் மூலம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, விசாகப்பட்டினம் மாவட்டம், அரக்கு வன பகுதியில் உள்ள பாடேரு, ஹக்கும்பேட்டா, பெத்தபாயலு, மஞ்சிகிடிபட்டு ஆகிய 4 மண்டலங்களில் அடர்ந்த வன பகுதியில் மனிதர்கள் எளிதில் செல்ல இயலாத இடங்களில் ஆங்காங்கே ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் கஞ்சா பயிர் சாகுபடி செய்யப்பட்டு இருப்பது நேற்று முன்தினம் தெரியவந்துள்ளது. மேலும், மிக உயரமான மலை பகுதிகளுக்கு இடையே இருக்கும் பள்ளத்தாக்குகளிலும் கஞ்சா பயிர் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிரோன் கேமராக்கள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ள கஞ்சா தோட்டங்களை போலீசார் மற்றும் வனத்துறையினர் இணைந்து  விரைவில் அழிக்க  தேவையான ஏற்பாடுகளை ஆந்திர மாநில அரசு செய்து வருகிறது.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : land ,forest area ,Visakhapatnam district , Visakhapatnam, forest, Cannabis cultivation, drone
× RELATED தனியார் தோட்ட வன நிலம் ஆக்கிரமிக்க...