மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகில் உள்ள 55 மறவாக்காடு சித்தேரி ஊராட்சி கஜா புயலால் மிகவும் பாதிப்படைந்துள்ளது. புயல் கடந்து 5 நாட்கள் ஆகியும் எந்த ஒரு அரசு அதிகாரிகளும் இப்பகுதிகளை பார்வையிட வரவில்லை. இதனை கண்டித்து சித்தேரி ஊராட்சியை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெண்கள், விவசாயிகள் மன்னார்குடி-முத்துப்பேட்டை இடையிலான சாலையில் சித்தேரி மெயின் ரோட்டில் காலிகுடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது வலங்கைமான் வட்டார வளர்ச்சி அலுவலர்(பிடிஓ) சண்முகம் நிவாரண பணிகளுக்காக ஜீப்பில் வந்தார். இதைகண்ட விவசாயிகள், ஜீப்பை மறித்து தங்களின் குறைகளை கூறினர். பின்னர் பிடிஓ சண்முகத்தை சிறைபிடித்த விவசாயிகள் கலெக்டர் நேரில் வர வேண்டுமென கூறி சாலை மறியலை தொடர்ந்தனர். அதிகாரி சிறை பிடிக்கப்பட்ட செய்தியறிந்து மன்னார்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கிருஷ்ணமூர்த்தி, கலைச்செல்வன் ஆகியோர் வந்து விவசாயிகளிடம் பேச்சு நடத்தி குடிநீருக்கு ஏற்பாடுகளை செய்தனர். அதனை தொடர்ந்து பிடிஓ சண்முகத்தை விடுவித்த விவசாயிகள் தங்களின் போராட்டத்தை கைவிட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி