ஈரோடு: கோமாரி நோய் தாக்குதல் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் கால்நடை சந்தைகளுக்கு இரண்டு வாரங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் சத்தி, கோபி, அந்தியூர், பவானி உள்ளிட்ட பகுதிகளில் மாடுகளுக்கு அதிக அளவில் கோமாரி நோய் தாக்கி வருகிறது. நோய் தாக்குதலுக்கு உள்ளான மாடுகள் இறந்து வருவதால், விவசாயிகளுக்கு பொருளாதார ரீதியாக இழப்பு ஏற்பட்டு வருகிறது. நோய் பரவுவதை தடுக்க கால்நடைத்துறை சார்பில் தடுப்பூசி போடப்பட்டு வந்தாலும் நோய் பாதிப்பு தொடர்ந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் நோய் பாதிப்பு ஏற்படும் மாடுகளை விவசாயிகள் சந்தைகளுக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதால், சந்தைக்கு வரும் மற்ற மாடுகளுக்கும் நோய் பரவி வருகிறது. எனவே நோய் பாதிப்பு மாடுகளை சந்தைகளுக்கு கொண்டு வர வேண்டாம் என கால்நடைத்துறையினர் அறிவுறுத்தியும் தொடர்ந்து விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. இதையடுத்து ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்நடை சந்தைகளுக்கும் 2 வாரங்களுக்கு தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து கலெக்டர் கதிரவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: மாவட்டத்தில் பருவ மழை பெய்து வருவதாலும், பனிப்பொழிவு அதிகம் இருப்பதாலும் கால்நடைகளுக்கு தொற்று நோய் பாதிப்பு ஏற்பட்டு வருவதால் மாவட்டத்தில் உள்ள கருங்கல்பாளையம், அந்தியூர், சீனாபுரம், மொடச்சூர், புளியம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் கால்நடை சந்தைகளுக்கு 2 வாரங்களுக்கு கால்நடைகளை சந்தையில் விற்கவோ, வாங்கவோ அனுமதி இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி