மஞ்சூர்: பாலகொலாவில் படுகரின மக்களின் பாரம்பரிய பண்டிகையான ‘சூஞ்சு’ பண்டிகை விமரிசையாக கொண்டாடப்பட்டது. இதில் 33 கிராமங்களை சேர்ந்த மக்கள் கலந்து கொண்டனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ளது பாலகொலா. இப்பகுதியில் வசிக்கும் படுகரின மக்களின் பாரம்பரிய ‘சூஞ்சு’ பண்டிகை நேற்று கொண்டாடப்பட்டது. இந்த பண்டிகையை முன்னிட்டு மேற்குநாடு சீமைக்குட்பட்ட 33 கிராமங்களை சேர்ந்த நுாற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பாலகொலாவில் உள்ள பெந்தொரை அணை என்ற இடத்தில் ஒன்று கூடினார்கள்.
தொடர்ந்து 33 ஊர் தலைவர்கள் முன்னிலையில் ஆண்டுக்கொருமுறை மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும் பழமைவாய்ந்த தங்க குண்டுமணிகள் மற்றும் வெள்ளி முத்திரைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதை தொடர்ந்து அனைவரும் நீண்ட வரிசையில் நின்று காணிக்கை செலுத்தினர்.
தொடர்ந்து பொதுமக்கள் மற்றும் கால்நடைகளை கொடிய நோய்கள் தாக்காமல் இருக்கவும், தீய சக்திகளிடமிருந்து பாதுகாக்கவும் வேண்டி மேலுார் மற்றும் தங்காட்டில் உள்ள மகாலிங்கசுவாமி கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கப்பட்டதுடன் படுகரின மக்களின் நடனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி