தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே 4 அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். கஜா புயலால் தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரத்தநாடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒரத்தநாடு அதனை சுற்றியுள்ள 2க்கும் மேற்பட்ட கிராமங்களில் 1லட்சம் தென்னை மரங்கள் அடியோடு அழிந்துவிட்டன, குடிசை வீடுகள் நொறுங்கி கிடக்கின்றன. இதனால் கடந்த 4 நாட்களாக அப்பகுதியில் மின்சாரம் முழுவதுமாக துண்டிக்கப்பட்டுள்ளது. மேலும் குடிக்க தண்ணீர், உணவு இல்லமால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தங்கள் பகுதியில் அதிகாரிகளோ, அமைச்சர்களோ, வந்து பார்வையிடவில்லை, ஆய்வு செய்யவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
இந்த வேதனையில் இருக்கும் நிலையில் அமைச்சர்கள், செங்கோட்டையன், கடம்பூர்ராஜு, துரைக்கண்ணு, உடுமலை ராதாகிருஷ்ணன், உள்ளிட்டோர் ஏராளமான கார்களில் ஒரத்தநாடு பகுதிக்கு வந்த போது 4 அமைச்சர்களை பொதுமக்கள் முற்றுகையிட்டுள்ளனர். முற்றுகையிட்ட பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். குடிநீர், உணவு, மின்சாரம் ஆகியவை தங்கள் பகுதிக்கு வழங்கப்படவில்லை , அதற்கான வழிவகை செய்யவில்லை, கடந்த 4 நாட்காளாக கடுமையான சிரமத்தில் இருக்கோம் இதற்கு அரசு தரப்பில் எந்த உதவியும் செய்யவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி