சென்னை: கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் தொற்றுநோய் பரவாமல் தடுக்க 200 டன் பிளீச்சிங் பவுடர், 5 லட்சம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்படுகிறது. குடிநீரில் குளோரின் சோதனை செய்ய 15,000 குளோரின் அளவை காட்டும் கிட், நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்களின் எண்ணிக்கை 216லிருந்து 296ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கஜா புயலால் பாதிக்கப்பட்ட 6 மாவட்டங்களில் உள்ள பொதுமக்களுக்கு தேவைப்படக்கூடிய மருத்துவ சிகிச்சை அளிக்க நடமாடும் சிறப்பு மருத்துவக் குழுக்களின் எண்ணிக்கை 216லிருந்து 296 அதிகரிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்காக 487 தங்கும் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த முகாம்களில் மொத்தம் 185 மருத்துவ குழுக்கள் பணியாற்றி வருகின்றன. மருத்துவ முகாம்களில் இதுவரை 43,825 நபர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. குடிநீரில் குளோரின் சோதனை செய்வதற்காக 15,000 எண்ணிக்கையிலான குளோரின் அளவினை காட்டும் கிட் (குளோரின் டெஸ்ட் கிட்) வழங்கப்பட்டுள்ளது.பொதுமக்களுக்கு மழையின் போதும், மழைக்குப் பின்பும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதார ஆலோசனைகள் அடங்கிய 5 லட்சம் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பயன்படுத்துவதற்காக கூடுதலாக 200 டன் பிளீச்சிங் பவுடர் அனுப்பப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் உள்ள இணை இயக்குனர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தேவையின் அடிப்படையில் அவசர நிலையினை சமாளிக்க ஏதுவாக 5 லட்சம் வரையில் செலவு செய்திட அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் காலதாமதம் தவிர்க்கப்பட்டு தங்கு தடையின்றி நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை உரிய நேரத்தில் வழங்குவது உறுதி செய்யப்படும்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி