×

ஒப்பந்ததாரர் வீட்டில் 40 சவரன், 1 லட்சம் கொள்ளை

சென்னை: கொளத்தூர், ஜி.கே.எம்.காலனி, 39வது தெருவை சேர்ந்தவர் ஜான் (36). கட்டிட ஒப்பந்ததாரர். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. ஒரு வயது பெண் குழந்தை உள்ளது. நேற்று முன்தினம் இரவு உணவுக்கு பிறகு தம்பதி இருவரும் தங்களது குழந்தையுடன் வீட்டில் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடாமல் தூங்கினர். நேற்று அதிகாலை ஜான் எழுந்தபோது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பீரோவை பார்த்தபோது, அதில் இருந்த 40 சவரன் நகைகள், 1 லட்சம் பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்தது தெரியவந்தது. இதுகுறித்து, கொளத்தூர் போலீசில் ஜான் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கைரேகை நிபுணர்களை வரவழைத்து பீரோவில் பதிவாகி இருந்த கைரேகையை சேகரித்தனர். மோப்ப நாய் அக்கினி வந்து, 33வது தெருவில் ஓடி நின்றது. அங்கு யாரையும் அக்கினி கவ்வி பிடிக்காததால் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

* கொருக்குப்பேட்டை, ஏகப்ப முதலி தெருவை சேர்ந்த கலைவாணி (45) என்பவரின் காரை திருட முயன்ற வண்ணாரபேட்டையை சேர்ந்த கார்த்திக் (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
* கிண்டி தொழிற்பேட்டையில் சிட்கோ தொழில் மைய வளாகத்தில் நேற்று  மாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது. இதுகுறித்து கிண்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
* கோட்டூர்புரத்தை சேர்ந்தவர் பிரகாஷ் (30). விற்பனை பிரதிநிதி. இவர், கோட்டூர்புரம், சித்ரா நகரை சேரந்த சுகந்தன் (23) என்பவருடன் நேற்று அதிகாலை வேளச்சேரியில் இருந்து கோட்டூர்புரம் நோக்கி சென்று கொண்டிருந்தார். கிண்டி சின்னமலை ஹால்டா சந்திப்பு அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த கார் இவர்கள் மீது மோதியதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில், பிரகாஷ் சம்பவ இடத்திலேயே இறந்தார். சுகந்தன் படுகாயமடைந்தார்.
* திருமணம் நிச்சயித்த எர்ணாவூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்த சரண்யா (19) என்ற பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* திருநின்றவூர், அம்பத்தூர் பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்த திருநின்றவூர், சுதேசி நகர், தாமிரபரணி தெருவை சேர்ந்த காஞ்சனா (50), அம்பத்தூர் ராமாபுரம் ஐயப்பன் தெருவைச் சேர்ந்த ஐயப்பன் (60) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
* கோயம்பேடு பகுதியில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட அரும்பாக்கம், அமராவதி நகர், திருவள்ளுவர் தெருவை சேர்ந்த கோகுலகிருஷ்ணன் (25), அரும்பாக்கம், எழில்நகர் பகுதியை சேர்ந்த குமரன் (எ) சூர்யா, எம்எடிஏ, டி-பிளாக் பகுதியை சேர்ந்த பிரகாஷ் (19) ஆகிய 3 பேரை  போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
* புதுவண்ணாரப்பேட்டை, டி.எச் சாலையில் உள்ள விபுதீஸ்வரர் கோயிலில் புகுந்து பித்தளை பொருள்களை திருடிய கொருக்குப்பேட்டை திருநாவுக்கரசு தோட்டம் பகுதியை சேர்ந்த ரவுடி தீனதயாளன் (32) என்பவனை போலீசார் கைது செய்தனர்.
* சோழவரம் நேரு தெருவை சேர்ந்தவர் விவேக் (30). இவரது மனைவி சுஜாதா (29). இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16ம் தேதி திருமணம் ஆனது. தற்போது 11 மாத ஆண் குழந்தை உள்ளது. கடந்த சில மாதங்களாக விவேக்கின் தாய் பங்கஜம்மாள் மற்றும் தம்பி விமல் ஆகிய இருவரும் சுஜாதாவிடம் வரதட்சனை கேட்டு தொல்லை கொடுத்து வந்ததாகவும், இது குறித்து பலமுறை விவேக்கிடம் எடுத்துக்கூறியும், அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் அவர்களுக்குள் அடிகக்டி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சுஜாதா மின் விசிறியில் தூக்கிட்டு, தற்கொலை செய்து கொண்டார். புளியந்தோப்பு சூளை பகுதியில் குட்கா விற்ற ராகவன் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 350 குட்கா பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டது.

பணம் திருடியதாக திட்டியதால் பெண் தீக்குளித்து தற்கொலை

வண்ணாரப்பேட்டை மேயர் பாசுதேவ் 2வது தெருவை சேர்ந்தவர் தரன் (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ராமதிலகம் (40). வண்ணாரப்பேட்டை, துணிக்கடை ஊழியர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். இந்நிலையில் துணிக்கடையில் பணத்தை திருடியதாக ராமதிலகம் மீது பழி சுமத்தி துணிக்கடையின் உரிமையாளர் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் ராமதிலகம் மனமுடைந்தார். நேற்று முன்தினம் இரவு ராமதிலகம் வேலை முடிந்து வந்து வீட்டில் இருந்த மண்ணெண்ணெயை உடலின் மீது ஊற்றி தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : contractor ,home ,robberies , Theft , contractor's home ,40 sovereigns, 1 lakh robberies
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...