×

மலைக்கோட்டை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற ஆயத்தபணிகள் மும்முரம்

திருச்சி:  கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன் மகா தீபம் ஏற்றுவதற்கான ஆயத்த பணிகள் மும்முரமாக  நடைபெற்று வருகிறது. தென்கயிலாயம் என அழைக்கப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை தீபதிருவிழா விமரிசையாக நடைபெறும். அன்று மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் சன்னதி முன்பு, கார்த்திகை தீபம் ஏற்றுவதற்காக கோபுரம் அமைக்கப்பட்டு பிரமாண்ட செப்பு கொப்பரை வைக்கப்பட்டுள்ளது. வருகிற 23ம்தேதி நடைபெற உள்ள கார்த்திகை தீப திருவிழாவுக்கான பூர்வாங்க பூஜை கடந்த 11ம் தேதி நடந்தது. தொடர்ந்து கொப்பரையில் திரி வைத்து எண்ணெய் ஊற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

பருத்தி துணியில் 300மீட்டர் நீளத்தில் திரியும், இலுப்பை எண்ணெய், நல்லெண்ணெய், நெய் ஆகியவை மொத்தம் 900லிட்டரும் ஏற்பாடு செய்யப்பட்டது. திரியை கொப்பரைக்கு ஏற்றும் பணி நேற்று மாலை துவங்கியது. இதற்காக திரியை பகுதி பகுதியாக பணியாளர்கள் மலை உச்சிக்கு எடுத்து வந்தனர். கோபுரத்தின் மேலே உள்ள கொப்பரைக்கு திரியை கயிறு கட்டி இழுத்து கொப்பரையின் மேல் ஏற்றினர். முதலில் ஒரு பகுதி திரி மட்டும் வைக்கப்பட்டு அதில் எண்ணெய் ஊற்றும் பணி நடந்தது. தொடர்ந்து கொப்பரையில் மற்ற பகுதிகளில் திரி வைக்கப்பட்டு எண்ணெய் ஊற்றப்படும். இந்த பணி முழுமையாக முடிவடைய ஓரிரு நாட்கள் ஆகும். எண்ணெய் முழுவதுமாக ஊற்றப்பட்ட பின் திரி அதில் நன்கு ஊறிவிடும். வரும் 23ம் தேதி கார்த்திகை தீபதிருவிழா அன்று மாலை 6 மணிக்கு கொப்பரையில் தீபம் ஏற்றப்படும். இந்த தீபம் அணையாமல் தொடர்ந்து 3 நாட்கள் எரியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : hill ,Karthikai , Mountain Hill, Karthikai, Deepam
× RELATED சேதமான சாலையில் ஆம்புலன்ஸ் வர...