×

தெற்கு டெல்லியில் அதிர்ச்சி ஆடை வடிவமைப்பாளர் பணிப்பெண் படுகொலை: சம்பளம் தராததால் வாலிபர் வெறிச்செயல்

புதுடெல்லி: தெற்கு டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில், ஆடை வடிவமைப்பாளர் மற்றும் அவரது வீட்டு பணிப்பெண் இருவரும் குத்தி கொலை செய்யப்பட்டனர். இச்சம்பவத்தில், பேஷன் டிசைனரிடம் டைலராக வேலை பார்த்து வந்தவர் உட்பட மூவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெற்கு டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் மாயா லக்கானி(53). இவர், கிரீன் பார்க் பகுதியில் துல்சி கிரியேஷன்ஸ் என்ற பெயரில் அழகு நிலையம் நடத்தி வந்தார். மேலும் ஆடை வடிவமைப்பாளராகவும் இருந்தார். இந்நிலையில், லக்கானியும், அவரது வீட்டில் பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்த 50 வயதான பகதூர் என்பவரும் நேற்றிரவு வாலிபரால் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டனர்.

இந்த கொலை சம்பவத்தில் லக்கானியிடம் டெய்லராக வேலை பார்த்த ராகுல் அன்வர்(24), அவரது உறவினர் ரஹமத்(24), மற்றும் நண்பர் வாசிம்(25) ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுபற்றி துணை கமிஷனர்(தென்மேற்கு) தேவேந்தர் ஆர்யா கூறியதாவது: புதன் கிழமை நள்ளிரவு சுமார் 2.45 மணியளவில் மூன்று வாலிபர்கள் வசந்த் கஞ்ச் போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றுள்ளனர். அப்போது, இரண்டுபேரை தாங்கள் கொலை செய்துவிட்டதாகவும், அவர்களது உடல்கள் வீட்டிலேயே கிடப்பதாகவும் தெரிவித்தனர். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார், மூவரையும் கைது செய்த பின், உடனடியாக சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு இரு பெண்கள் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது. அவர்களது உடல்களை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

வாலிபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட லக்கானியிடம் மாஸ்டர் ெடய்லராக ராகுல் அன்வர் பணியாற்றி வந்துள்ளார். ஆனால், அவருக்கான ஊதியத்தை கடந்த சில மாதங்களாக தரவில்லை என தெரிகிறது. இதனால் பணத்தை தருமாறு கேட்டபோது லக்கானி தவணை முறையில் வழங்கி வந்துள்ளார். இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டது. இதனால், லக்கானியை கொலை செய்ய முடிவு செய்து ராகுல் அன்வர் தனது உறவினர் மற்றும் நண்பருடன் சம்பவத்தன்று லக்கானியின் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பணம் கேட்டு தகராறில் ஈடுபட்டார்.

வாய்தகராறு முற்றிய நிலையில், லக்கானியை நண்பர், உறவினர் உதவியுடன் கத்தியால் குத்தி கொலை செய்தார். தடுக்க வந்த பணிப்பெண்ணையும் கொலை செய்தனர். பின்னர் லக்கானியின் வீட்டில் இருந்த விலையுயர்ந்த பொருட்கள், மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு கொலை நடந்த வீட்டிலிருந்த காரில் தப்பிச் சென்றனர். ஆனால், அதன்பின், அவர்கள் முடிவை மாற்றிக்கொண்டு வசந்த் கஞ்ச் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள மூவர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேற்கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : south Delhi , South Delhi, fashion designer, slaughter
× RELATED தெற்கு டெல்லியில் லேசான நில நடுக்கம் உணரப்பட்டதால் மக்கள் அச்சம்..!!