கோவை: கோவை உக்கடம் பேரூர் பைபாஸ் ரோட்டில் உள்ள மீன் மார்க்கெட் அருகே ஸ்லேட்டர் ஹவுஸ் பகுதியில் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ள 250 வீடுகளும், 3 கோயில்களும் உள்ளன. இதில் சுமார் 1000 பேர் வசிக்கின்றனர். உக்கடம் மேம்பால திட்ட பணிக்காக 250 வீடுகளையும் காலி செய்யுமாறு மாநகராட்சி சார்பில் 6 மாதத்துக்கு முன் நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இவர்களுக்கு மாற்று ஏற்பாடாக குடிசை மாற்று வாரியம் சார்பில் மலுமிச்சம்பட்டியில் அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு அதில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இருப்பினும் வீடுகளை காலி செய்யாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன் மாநகராட்சி சார்பில் மின்வாரியம் மூலம் வீடுகளுக்கான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு மீட்டர் பாக்ஸ் அகற்றப்பட்டது. இதை தொடர்ந்து அங்கு வசிப்பவர்கள் வீடுகளை காலி செய்து வந்தனர்.
இந்நிலையில் அங்கு வசிப்பவர்களில் 19 குடும்பங்கள் வீடுகளை காலி செய்யாமல் இருந்தனர். இன்று காலை அவர்கள் கெம்பட்டி காலனியில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்கப்பட்டனர். இந்நிலையில் இன்று காலை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாநகராட்சி மத்திய மண்டல உதவி ஆணையர் செந்தில்குமார்ரத்தினம், நகர திட்ட அமைப்பு அதிகாரி ரவிச்சந்திரன், உதவி அதிகாரி செந்தில்பாஸ்கரன், மாநில நெடுஞ்சாலை துறை பொறியாளர் சிற்றரசு, குடிசை மாற்று வாரிய கண்காணிப்பு பொறியாளர் ராஜசேகர், செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் வெங்கட், சுகாதார துறை அதிகாரி குணசேகரன் ஆகியோர் மேற்பார்வையில் 5 ஜேசிபி மூலம் 250 ஆக்கிரமிப்பு வீடுகள், 3 கோயில்கள் இடித்து அகற்றப்பட்டன, இப்பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டனர். போலீஸ் துணை கமிஷனர் பாலாஜி சரவணன், உதவி கமிஷனர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி