சென்னை: கஜா புயலின் வெளி விளிம்பு கரையை தொட்டது என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். கஜா புயல் குறித்து சென்னையில் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தபோது இதனை தெரிவித்தார். மேலும் கஜா புயலின் கண் பகுதி 20 கிலோ மீட்டர் உள்ளது என்றும் கஜா புயலின் வேகம் தற்போது மணிக்கு 10 கிலோ மீட்டராக குறைந்து உள்ளது என்றும் தெரிவித்தார். இரவு 10 முதல் 11 மணி அளவில் புயலின் வேகம் அதிகரித்து நாகையில் கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளார். கஜா புயல் நாகை மற்றும் காரைக்கால் கடற்கரையில் இருந்து 138 கிலோ மீட்டர் தொலையில் மையம் கொண்டுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
கஜா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை அரசு அப்புறப்படுத்தி வருகிறது. மேலும் 7 மாவட்டங்களுக்கு போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நாகப்பட்டினத்தில் ஏற்கனவே நாளை உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் கடலூர், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம், புதுச்சேரி, காரைக்கால், புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி