சென்னை: ஊழலை சட்டமயமாக்கும் வகையில் மத்திய அரசு செயல்பட்டு வருவதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். ரஷ்ய புரட்சி தின கூட்டம் சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். ரூ.12 லட்சம் கோடிகளை கடனாக கொடுத்து விட்டு, அதனை வசூலிக்க மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என யெச்சூரி குற்றம்சாட்டியுள்ளார். எந்த பிரச்சனையாக இருந்தாலும் அதில் புகுந்து குழப்பம் மற்றும் பிரிவினையை ஏற்படுத்துவதிலேயே பாரதிய ஜனதா குறியாக உள்ளதாக சாடினார்.
அயோத்தி விவகாரமாகட்டும், சபரிமலை விவகாரமாகட்டும் . அவர்கள் அதனை பயன்படுத்தி பிரிவினையை தான் ஏற்படுத்துகிறார்கள் என்றார். சபரிமலை விவகாரத்தில் பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இரட்டை நிலைபாடு கொண்டுள்ளனர் என்றார். முத்தலாக் விவகாரத்தில் பெண்களுக்கு சமஉரிமை பற்றி பேசியவர்கள், சபரிமலை விவகாரத்தில் அதை பற்றி ஏன் பேசுவதில்லை என வினவினார். முத்தலாக் தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டதில் உள்ள தவறுகளை மட்டுமே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எதிர்க்கிறது என்றார். பாரதிய ஜனதாவை எதிர்த்து எதிர்கட்சிகள் வலுவான கூட்டணியாக உருவெடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி