×

இலங்கை அரசியலில் அதிரடி திருப்பம் ராஜபக்சே அரசு படுதோல்வி : நாடாளுமன்றத்தில் கடும் அமளிக்கு இடையே நம்பிக்கையில்லா தீர்மானம் நிறைவேறியது

கொழும்பு: இலங்கை அரசியலில் நேற்று அதிரடி திருப்பம் ஏற்பட்டது. ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் விக்ரமசிங்கே தரப்பு கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் கடும் அமளிக்கு இடையே நிறைவேறியது. இந்த தீர்மானத்தில் ராஜபக்சே அரசு படுதோல்வி அடைந்தது. இலங்கையில் பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை அதிபர் சிறிசேனா திடீரென நீக்கிவிட்டு, புதிய பிரதமராக முன்னாள் அதிபர் ராஜபக்சேவை நியமித்தார். நாடாளுமன்றத்தையும் நவம்பர் 16ம் தேதி வரை முடக்கி உத்தரவிட்டார். இதனால், இலங்கையில் பெரும் அரசியல் குழப்பம் ஏற்பட்டது. ரணில் பதவி பறிக்கப்பட்டதற்கு இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிக்கும் வரையில் ரணில்தான் பிரதமர் என்றும் அறிவித்தார். சபாநாயகர் எதிர்ப்பையும் மீறி பிரதமராக ராஜபக்சே பதவியேற்றார். இருந்த போதிலும் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து வெளியேற மறுத்த ரணில், அங்கேயே இருந்து வந்தார். ஆனால், அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு, கார்கள் போன்றவற்றை சிறிசேனா திரும்ப பெற்றார். பிரதமர் பதவிக்காக ரணிலும், ராஜபக்சேவும் ஏட்டிக்கு போட்டியாக தலைநகர் ெகாழும்புவில் பிரமாண்ட பேரணிகளை நடத்தி தங்கள் பலத்தை காட்டி வந்தனர். இதனால், இலங்கையில் அரசியல் நிலைத்தன்மை குலைந்தது.

ஜனநாயக முறைப்படி அரசியல் சட்டத்தை பின்பற்றும்படி அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள், அதிபர் சிறிசேனாவை வலியுறுத்தின. உள்நாட்டிலும், சர்வதேச
அளவிலும் ஏற்பட்ட நிர்ப்பந்தம் காரணமாக, நாடாளுமன்றம் நவம்பர் 14ம் தேதி கூட்டப்படும் என அறிவித்தார். அப்போது, ராஜபக்சே தனது பெரும்பான்மையை நிரூபிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கான பெரும்பான்மையை ராஜபக்சே திரட்டி விடுவார் என சிறிசேனாவும் நம்பினார். ஆனால், 16 எம்பி.க்களை கொண்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு, ராஜபக்சேவுக்கு ஆதரவு அளிக்க திட்டவட்டமாக மறுத்து விட்டது. ரணிலுக்கு ஆதரவு அளிக்கப் போவதாக பகிரங்கமாக அறிவித்தது. இதனால், ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்பது உறுதியானது. சிறிசேனாவுக்கு இது பெரும் அதிர்ச்சியை அளித்தது. இதனால், கடந்த வெள்ளிக்கிழமை இரவு திடீரென நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டார். நாடு முழுவதும் இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின்படி, நாடாளுமன்றத்தின் பதவிக்காலம் நாலரை ஆண்டுகள் முடிந்த பிறகே கலைக்க முடியும். ஆனால், நாடாளுமன்றத்தின் பதவிக்காலம்  முடிவதற்கு 20 மாதங்களுக்கு முன்பாகவே சிறிசேனா அதை கலைத்ததை சட்ட நிபுணர்கள் யாரும் ஏற்கவில்லை. சிறிசேனாவின் சட்ட ஆலோசகரும் இதை எதிர்த்தார். நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தில் ரணில் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த நீதிமன்றம், ‘நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது’ என நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. மேலும், ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி நவம்பர் 14ம் தேதி நாடாளுமன்றத்தை கூட்டும்படி உத்தரவிட்டது.

இந்த பரபரப்பான சூழலில் நேற்று காலை நாடாளுமன்றம் கூடியது. இதில், ராஜபக்சே அரசுக்கு எதிராக ரணில் தரப்பினர் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அதன் மீது வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில், போதுமான எம்பி.க்களின் ஆதரவு இல்லாததால் ராஜபக்சேவால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது. இதனால், நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை தடுக்கும் வகையில் ராஜபக்சேவும், அவருடைய ஆதரவு எம்பி.க்களும் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கடும் அமளி ஏற்பட்டது. இதற்கு இடையிலும் குரல் வாக்கெடுப்பு நடத்த சபாநாயகர் உத்தரவிட்டார். அதில், 122 எம்பி.க்களின் ஆதரவுடன் நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதைத் தொடர்ந்து, ராஜபக்ேச தனது எம்பி.க்களுடன் வெளிநடப்பு செய்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது குறித்து அதிபர் சிறிசேனாவுக்கு சபாநாயகர் ெஜயசூர்யா  கடிதம் எழுதியுள்ளார். அதில், அடுத்தக்கட்ட அரசியலமைப்பு நடவடிக்கையை எடுக்கும்படி வலியுறுத்தி உள்ளார். மேலும், தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்த 122 எம்பி.க்களின் கையெழுத்துடன் கூடிய பட்டியலையும் சிறிசேனாவுக்கு அவர் அனுப்பி உள்ளார்.

ரணில் பிரதமர் ஆவாரா?

தனக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை ராஜபக்சே ஏற்க மறுத்துள்ளார்.  இதனால், இலங்கையில் தொடர்ந்து சிக்கல் நீடிக்கிறது. அடுத்தக்கட்ட  நடவடிக்கை பற்றி ரணிலும், ராஜபக்சேவும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராஜபக்சே  அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, பிரதமர் பதவியை ரணில் ஏற்பாரா என்பது விரைவில் தெரியும்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Rajapakse ,parliament , Rajapaksa government fails ,Sri Lankan politics
× RELATED குடியுரிமை திருத்த சட்ட மசோதாவுக்கு...