பெரியகுளம்: என்னைப் பார்த்து டீக்கடை வைத்தவர் எனக்கூறும் டி.டி.வி.தினகரன் என்ன மைசூர் மகாராஜா பேரனா என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார். தேனி மாவட்டம், பெரியகுளத்தில் அதிமுக சார்பில் சட்டமன்ற தொகுதி ஆலோசனைக்கூட்டம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், ‘‘என்னைப் பார்த்து ஓ.பன்னீர்செல்வம் டீக்கடை வைத்தவர்தானே என டி.டி.வி.தினகரன் பேசுகிறார். உழைக்க வேண்டும் என நினைத்து டீக்கடை நடத்தினேன். அதில் நான் எப்போதுமே பெருமிதம் கொள்வேன். தினகரன் என்ன மைசூர் மகாராஜா பேரனா? சாதாரண குமாஸ்தா மகன் என்பதை அவர் நினைவில் கொள்ள வேண்டும்,’’ என்றார்.
தேனியில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தேனி மாவட்டத்தில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் விரைவில் உணவுப்பூங்கா அமைக்கப்படும். டெங்கு, பன்றிக்காய்ச்சலால் சில மரணங்கள் ஏற்பட்டது. பாதிக்கப்பட்டவர்கள் சுயமாக மருந்துக்கடைகளுக்கு சென்று மருத்துவர் ஆலோசனை இல்லாமல் மருந்து வாங்கி உட்கொண்டதே இதற்கு காரணம். பெரியாறு அணையில் இருந்து விநாடிக்கு 2,300 கன அடி நீரை தவிர, கூடுதலாக தண்ணீரை திறந்து தமிழகத்திற்கு கொண்டு வரமுடியாது. இதனால் தற்போதுள்ள 4 குழாய்களை தவிர கூடுதல் குழாய்களை அமைத்து தண்ணீர் கொண்டு வர கேரளாவிடம் அனுமதி கேட்டுள்ளோம். ஆனால் கேரள அரசு இதுவரை அனுமதி தரவில்லை,’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி