ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் நடந்த திருமண விழாவில், சசிகலாவின் தம்பி திவாகரன் மகன் ஜெயானந்தை, அமைச்சர் மணிகண்டன் சந்தித்து பேசியது அதிமுக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் நடந்த ஒரு திருமண விழாவில் அமைச்சர் மணிகண்டன் பங்கேற்று விட்டு காரில் ஏறி கிளம்ப முயன்றார். அப்போது சசிகலா தம்பி திவாகரன் மகனும், போஸ் மக்கள் பணியகத்தின் தலைவருமான ஜெயானந்த் வந்தார். இவரது வருகையை அமைச்சரிடம் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதையடுத்து காரை விட்டு இறங்கிய அமைச்சர் மணிகண்டன், ெஜயானந்த் காரின் அருகில் சென்றார். அவரை பார்த்ததும் ஜெயானந்த் காரை விட்டு இறங்கி வணக்கம் தெரிவித்தார்.
இருவரும் நலம் விசாரித்தபடியே 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் அமைச்சர் மணிகண்டன் கிளம்பி சென்றார். இந்த சம்பவம் அதிமுக தொண்டர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிமுக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், ‘‘சசிகலா குடும்பத்தினரை கட்சியை விட்டு ஒதுக்கி வைத்து, அவர்களை சரமாரியாக விமர்சித்து பேசி வருகிறோம். ஏற்கனவே சசிகலாவின் கணவர் நடராஜன் இறந்தபோது, அதிமுகவில் இருந்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் யாரும் செல்லவில்லை. ஆனால் அமைச்சர் மணிகண்டன் அப்போது தனது தந்தையை அனுப்பி துக்கம் விசாரித்ததாக தகவல் வெளியானது. தற்போது அமைச்சர் மணிகண்டனே நேரடியாக ஜெயானந்திடம், வலியச் சென்று பேசியது கட்சிக்குள் புது குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது,’’ என்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி