பென்னாகரம்: ஒகேனக்கல் பரிசல் துறையில் குவிந்து கிடந்த பிளாஸ்டிக் கழிவுகளை பரிசல் ஓட்டிகளே இன்று அகற்றும் பணியில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். அவர்கள் குடும்பத்தினருடன் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் காவிரிப்பகுதிகளில் பெய்த கனமழையால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்தது.
அப்போது, அதிகளவில் அடித்து வரப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள், மரக்கிளைகள் உள்ளிட்டவை ஒகேனக்கல் பரிசல் துறையில் இருந்து மணல் திட்டு மற்றும் பல இடங்களில் ஆங்காங்கே தேங்கி கிடந்தது.
தற்போது நீர்வரத்து குறைந்துள்ள நிலையில் பிளாஸ்டிக் கழிவுகள், குப்பைகள் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இன்று காலை பரிசல் ஓட்டிகளே தாமாக முன்வந்து கோத்திக்கல், மாமராமத்து கடவு ஆகிய பரிசல் துறைகளில் தேங்கி கிடந்த குப்பை கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி