சென்னை : நவ.15ம் தேதி முற்பகல் கடலூர்-பாம்பன் இடையே கஜா புயல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தற்போதைய நிலவரப்படி நாகப்பட்டினத்தில் இருந்து 800 கி.மீ தொலைவில் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. வடகடலோர மாவட்டங்களில் 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை மழை பெய்யும் என்றும் தமிழக கடலோர பகுதிகளில் 15ம் தேதி 20 செ.மீ.க்கும் அதிகமான மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு வானிலை செய்தித் தொடர்பாளர் முகநூலில் கஜா புயல் குறித்த விவரங்களை பதிவிட்டுள்ளார்.
வருகிற நவம்பர் 15ம் தேதி ஆண்டு காலை முதல் மதியம் வரை கடலூர் மற்றும் வேதாரண்யம் இடையே பலத்த காற்றுடன் கஜா புயல் கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே சென்னையை பொறுத்தவரை நவம்பர் 14ம் தேதி மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்த புயலானது தற்போது திசைமாறி நகர்ந்து வருகிறது. கடந்த 4 மணி நேரத்தில் இந்த புயல் எதிர்பாராத வகையில் நகர்ந்துள்ளது.
இந்த புயலால் வட தமிழக உள்மாவட்டங்களை காட்டிலும் தென் தமிழக உள்மாவட்டங்களில் அதிகனமழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 14 மற்றும் 15 ஆகிய தினங்களில் வட தமிழக கடலோர பகுதிகளில் மழை பெய்யும் என்றும் சென்னையில் 14ம் தேதி மட்டுமல்லாது 15 மற்றும் 16ம் தேதிகளில் மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்டா பெல்ட் , தென் தமிழக உள்மாவட்டங்கள் மற்றும் தென் மலைத் தொடர்ச்சி பகுதிகளில் அதிகனமழை பெய்யும் என்றும் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து அடுத்த இரு தினங்களில் கஜா புயல் வலுப்பெறுகிறது. மணிக்கு 60- 80 கிமீ வேகம் முதல் அதிக பட்சமாக 90-100 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் நிலையில் முந்தைய புயலான வர்தா அல்லது தானே புயல் அளவிற்கு கஜா புயலின் தாக்கம் இருக்காது. இதனிடையே வருகிற நவம்பர் 16ம் தேதி மீனவர்கள் வங்கக் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நவம்பர் 19 மற்றும் 20ம் தேதிகளில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று கூறப்படுகிறது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி