மால்டா: பாஜ.வின் ரத யாத்திரையை தடுப்பவர்களின் தலைகள், சக்கரங்களின் கீழ் வைத்து நசுக்கப்படும் என்று பாஜ மகளிர் அணி தலைவர் ஒருவர் கூறியுள்ளார். இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், மேற்குவங்க மாநிலத்தில் 42 மக்களவை தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பாஜ முடிவு செய்துள்ளது. இதன் மூலம் மக்களின் கவனத்தை கவர்ந்து வாக்குகளை அள்ள முடியும் என்று பாஜ தலைவர்கள் கருதுகின்றனர். இதன்படி, அடுத்த மாதம் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரையில் மூன்று ரத யாத்திரைகள் நடத்த அம்மாநில தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த ரத யாத்திரைகளை பாஜ தேசியத் தலைவர் அமித்ஷா தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் பிரமாண்ட பேரணி ஒன்றை நடத்தவும், அதில் பிரதமர் நரேந்திர மோடியை அழைத்து வந்து பேச வைக்கவும் பாஜ தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், ரத யாத்திரை தொடர்பாக மால்டா நகரில் நேற்று நடந்த பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது, பாஜ மாநில மகளிர் அணி தலைவர் லாக்கெட் சாட்டர்ஜி பேசினார். அப்போது, ‘‘பாஜ.வின் ரத யாத்திரையை தடுத்து நிறுத்த சிலர் முயற்சி செய்வதாக தகவல் வந்துள்ளது. அதுபோன்றவர்களின் தலைகள் ரதத்தின் சக்கரங்களின் கீழ் நசுக்கப்படும்’’ என்றார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி