×

அரூர் அருகே 2 வாலிபர்களால் பலாத்காரம் செய்யப்பட்ட பிளஸ் 2 மாணவி சாவு: உடலை வாங்க மறுத்து பெற்றோர் போராட்டம்

அரூர்: தர்மபுரி மாவட்டம் அரூர் தாலுகா சிட்லிங் மலைகிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை (43). இவரது மனைவி மலர்(40). இவர்களது மகள் சவுமியா(17), விடுதியில் தங்கி பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். தீபாவளி பண்டிகைக்காக கடந்த 5ம் தேதி சொந்த ஊருக்கு வந்த மாணவி, அன்று மாலை 5 மணியளவில் இயற்கை உபாதை கழிப்பதற்காக ஒதுக்குப்புறமான இடத்திற்கு சென்றார். அப்போது, அதே பகுதியை சேர்ந்த சதீஷ் (22), ரமேஷ் (22) ஆகிய இருவரும், மாணவியை பின் தொடர்ந்து சென்று, அவரது கை, கால்களை கட்டியும், வாயில் துணியை வைத்தும் பாலியல் பலாத்காரம் செய்து விட்டு தப்பியோடினர். பின்னர், கட்டை அவிழ்த்துக் கொண்டு வீடு திரும்பிய மாணவி, தனக்கு நேர்ந்த கொடுமையை பற்றி பெற்றோரிடம் கூறினார்.

இதுபற்றி உடனடியாக கோட்டப்பட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ரமேஷ் மற்றும் சதீஷ் ஆகியோர் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து தேடி வந்தனர். மேலும், பாதிக்கப்பட்ட மாணவியை கடந்த 7ம் தேதி, தொப்பூர் குறிஞ்சி நகர் வள்ளலார் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தில் தற்காலிகமாக தங்க வைத்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாணவி சவுமியாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நேற்று காலை 11 மணியளவில், சிகிச்சை பலனின்றி சவுமியா இறந்தார். தகவல் அறிந்த சிட்லிங் மலைகிராம மக்கள் அரசு மருத்துவமனைக்கு திரண்டு வந்தனர். சவுமியாவை பாலியல் பலாத்காரம் செய்த இருவரையும் கைது செய்யும் வரை, சடலத்தை வாங்க மாட்டோம் என அவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த டவுன் போலீசார் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். இது குறித்து மாணவி சவுமியாவின் தாய் மலர் கூறுகையில், ‘திடீரென சவுமியா இறந்தது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. என் மகளை கொன்ற ரமேஷ், சதீஷ் இருவரையும் கைது செய்யும் வரை, அவளது சடலத்தை வாங்க மாட்டோம்,’ என்றார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : student ,youths ,Parents ,Aroor , Plus 2,student,killed,2 youths,Aroor,Parents,struggle,refuse,body
× RELATED குமாரபாளையம் அருகே கோர விபத்து பனை...