சென்னை: குன்றத்தூர் அருகே பட்டப்பகலில் 6 பேர் கொண்ட கும்பல் ஒன்று ரவுடியை ஓட ஓட விரட்டி வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை அடுத்த குன்றத்தூர் அருகே பழந்தண்டலம் பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் மகன் விஜய் (25) ரவுடியான இவர் எருமையூரில் செயல்படும் கல்குவாரிகளை மிரட்டி மாமுல் வாங்கி வந்தார். இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் குன்றத்தூர் காவல்நிலையத்தில் உள்ளது. மேலும், இவர் போலீசாரிடம் சிக்காமல் தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தார். இவரால் அந்தப்பகுதியை சேர்ந்த பல்வேறு ரவுடி கும்பல்கள் பாதிக்கப்பட்டு இருந்தது. மேலும் விஜயை கொலை செய்வதற்காக திட்டம் தீட்டி இருந்ததாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று மதியம் விஜய் தனது கூட்டாளியை பார்ப்பதற்காக எருமையூருக்கு பைக்கில் சென்றுள்ளார். பின்னர், கூட்டாளியை பார்த்துவிட்டு தனது வீட்டுக்கு மன்னடியம்மன் கோயில் தெரு வழியாக பைக்கில் வந்துகொண்டிருந்தார். அப்போது, அந்த தெருவில் மறைந்திருந்த 6 பேர் கொண்ட கும்பல் விஜய் வந்த பைக்கை வழிமறித்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய், கொலையாளிகளிடம் இருந்து தப்பி ஓடினார். எனினும் அந்த கும்பல் ஓட ஓட விரட்டி சென்று கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் விஜய்யை வெட்டியது. இதனால் ரத்தவெள்ளத்தில் அலறி துடித்தபடி அவர் கிழே விழுந்தார். இந்த சத்தம் கேட்ட அப்பகுதியில் இருந்த மக்கள் ஓடிவந்தனர். மக்கள் கூட்டத்தை பார்த்த அந்த கும்பல் ஒரு காரில் ஏறி தப்பிசென்றுவிட்டது.
இதையடுத்து அக்கம் பக்கத்தினர் விஜயை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துவமனை செல்லும் வழியிலேயே விஜய் இறந்தார். இதையடுத்து தகவல் அறிந்து சோமங்கலம் போலீசார் கொலை நடந்த இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.
கல் குவாரிகளில் மாமுல் வாங்குவதில் போட்டி
எருமையூரில் ஏராளமான கல்குவாரிகள் இயங்கி வருகிறது. இதன் குவாரிகளில் அப்பகுதியில் வலம்வரும் ரவுடிகள் மாமுல் வாங்க செல்வது வழக்கம். இந்நிலையில், குவாரிகளில் மாமுல் வாங்குவதில் ரவுடிகளிடையே முன் விரோதம் இருந்து வருகிறது. எனவே இதன் காரணமாக விஜயை கொலை செய்து இருக்கலாம் என்று போலீசார் சதேகிக்கின்றனர். அதேபோன்று ரவுடி விஜய் மீது குன்றத்தூர் காவல்நிலையத்தில் உள்ள கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் அவரை பழிக்கு பழியாக கொலை செய்தார்களா? என்றும் போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி