மேட்டூர்: கர்நாடக மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததால், கடந்த ஜூன் மாதம் முதலே மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கத்தொடங்கியது. 17.6.18ம் தேதி இரவு கபினி அணை உபரிநீர் மேட்டூர் அணையை வந்தடைந்தபோது 41 அடியாக இருந்த நீர்மட்டம் படிப்படியாக அதிகரித்து, 17.7.18ம் தேதி 100 அடியானது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரிப்பால் 23.7.18ம் தேதி 39வது ஆண்டாக முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. நாளடைவில் மழையின் தாக்கம் குறைந்ததால் நீர்வரத்து சரிந்தது. வரத்தை காட்டிலும், பாசனத்துக்கு கூடுதலாக தண்ணீர் திறந்ததால் நீர்மட்டம் குறைந்தது.
கடந்த 26.10.18ம் தேதி விநாடிக்கு 13,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு மறுநாள் 17,850 கனஅடியாக அதிகரிக்கப்பட்டதால் 102.88 அடியாக இருந்த நீர்மட்டம் 29.10.18ம் தேதி 100.91 அடியாகவும், மறுநாள் 100 அடிக்கு கீழ் 99.88 அடியாக சரிந்தது. இதைதொடர்ந்து கடந்த 2ம் தேதி நீர்திறப்பு விநாடிக்கு 500 கனஅடியாக குறைக்கப்பட்டது. அன்றைய தினம் 97.84 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம், மறுநாள் 98.09 அடியானது. இந்தநிலையில், மழை காரணமாக நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நீர்மட்டம் நேற்று முன்தினம் 99.74 அடியானது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் மீண்டும் 100 அடியை எட்டியது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி