சென்னை: சேலம் மாவட்டத்தில் தலையை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சிறுமி ராஜலட்சுமியின் குடும்பத்தார் மற்றும் அனைத்து பெண்கள் அமைப்புகள் சார்பில் சென்னை, தலைமை செயலகத்தில் உள்துறை செயலாளரை நேற்று சந்தித்து மனு அளித்தனர். அதில் கூறி இருப்பதாவது: சேலம் மாவட்டம் ஆத்தூர் தளவாய்பட்டி தலித் சமூகத்தை சார்ந்த சின்னப்பொண்ணு, சாமிவேல் தம்பதியின் 12 வயது மகள் ராஜலட்சுமிக்கு, அதே பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் தொடர்ந்து சில நாட்களாக பாலியல் சீண்டல் செய்து வந்துள்ளார். இதை அவர் தன் அம்மாவிடம் சொல்லி இருக்கிறார்.
இதனால் ஆத்திரமடைந்த தினேஷ்குமார், கடந்த மாதம் 22ம் தேதி ராஜலட்சுமியை அவரது தாயாரின் கண்ணெதிரிலேயே அவள் வீட்டுக்குள்ளயே தலையை வெட்டி படுகொலை செய்திருக்கிறான். இந்த வழக்கு விசாரணை முடியும் வரை குற்றவாளியை பிணையில் விடக்கூடாது. படுகொலை செய்யப்பட்ட ராஜலட்சுமியின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும். அவருடைய குடும்பத்திற்கு ₹25 லட்சம் அரசு வழங்க வேண்டும். இந்த வழக்கை தேசிய மகளிர் ஆணையம் மற்றும் தமிழக மகளிர் ஆணையம் தானாக முன்வந்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் சாட்சியங்கள் பாதுகாக்கப்பட வேண்டும். 60 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து 120 நாட்களுக்குள் குற்றவாளிக்கு தண்டனை வழங்க வேண்டும். தமிழகத்தில் எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தை முறையாக அமல்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி