×

தர்மபுரி அருகே கிராம மக்கள் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் செய்தவர் ஊருக்குள் நுழைய எதிர்ப்பு: தந்தை உடலுக்கு மருத்துவமனையில் ஈமச்சடங்கு

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் இண்டூர் கோரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் முருகன் (27). பிஇ பட்டதாரியான இவர், அதே பகுதியை சேர்ந்த வேறு சமூகத்தை சேர்ந்த 20 வயது இளம்பெண்ணை காதலித்தார்.  இவர்களது காதலுக்கு இருதரப்பிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், முருகன் அந்த பெண்ணுடன் ஊரை விட்டு வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னரும், காதல் ஜோடிக்கு கடும் எதிர்ப்பு இருந்ததால், முருகன் மீண்டும் ஊருக்கு வரவில்லை. இந்நிலையில் நேற்று முன்தினம், முருகனின் தந்தை செல்வம், வாகன விபத்தில் உயிரிழந்தார். அவரது சடலத்தை  கைப்பற்றிய போலீசார், பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனிடையே, தந்தைக்கு ஈமக்காரியம் செய்வதற்கு கோரப்பள்ளி கிராமத்திற்கு முருகன் வருவார் என எதிர்பார்ப்பு நிலவியது. இதுதொடர்பாக  இருசமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக, இண்டூர் போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். இந்நிலையில், தான் ஊருக்குள் வருவதற்கு கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிப்பதை அறிந்த முருகன், ஊருக்குள் செல்லாமல் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த தனது தந்தை செல்வத்தின் உடலுக்கு  ஈமக்காரியம் செய்தார். பின்னர், அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து கோரப்பள்ளி கிராமத்தில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.




பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dhammapuri ,residents , village , Dharmapuri , father,s hospitalized,hospital
× RELATED வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம்...