சென்னை: ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராக அப்போலோ மருத்துவர்கள் உள்ளிட்ட 13 பேருக்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது.முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் உள்ளதாக பலர் கூறிவந்தனர். இதையடுத்து மரணம் குறித்து விசாரிக்க தமிழக அரசு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமியை நியமித்தது. அதன்படி ஆணையம் ஜெயலலிதா மரணம் தொடர்பாக அப்போலோ மருத்துவர்கள், முன்னாள் அதிகாரிகள் என பலருக்கு சம்மன் அனுப்பி விசாரணை நடத்தி வருகிறது.இந்தநிலையில் வரும் 12ம் தேதி அப்போலோ மருத்துவமனையின் இதயவியல் சிறப்பு மருத்துவ நிபுணர் கார்த்திகேசன் குறுக்கு விசாரணைக்காக ஆஜராக ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. 13ம் தேதி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு மருத்துவர்கள் ரமேஷ் வெங்கட்ராமன், ரேமன்ட் டோமினிக் சேவியோ, செந்தில்குமார், நுரையீரல் நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் நரசிம்மன், அப்போலோ நிர்வாக அதிகாரி சுப்பையா விஸ்வநாதன், நமது அம்மா நாளிதழ் ஆசிரியர் மருது அழகுராஜ், கோத்தகிரி பேங்க் ஆப் இந்தியா கிளை மேலாளர் அலோக்குமார் ஆகியோர் குறுக்கு விசாரணைக்காக ஆஜராக உத்தரவிட்டுள்ளது.
14ம் தேதி இருதயம் மற்றும் நுரையீரல் மாற்று அறுவை சிகிச்சை நிபுணர் தங்கராஜ் பால்ரமேஷ், இதயவியல் மருத்துவ நிபுணர் மேத்யூ சாமுவேல் கலோலிக்கல் ஆகியோர் விசாரணைக்காகவும், உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி மறு விசாரணைக்காகவும் ஆஜராக வேண்டும் என்றும், 15ம் தேதி அப்போலோ மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவு டெக்னீசியன் மதிவாணன், செவிலியர் ஜோஸ்னம்மாள் ஜோசப், இன்ஜினியர் சேஷாத்திரி நாராயணன் ஆகியோர் குறுக்கு விசாரணைக்காக ஆஜராகவும் ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி