நெல்லை: விளாத்திகுளம், கூடங்குளத்தில் தந்தை, மகன் உள்ளிட்ட 4 பேர் தண்ணீரில் மூழ்கி பலியாயினர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள அயன்செங்கல்படை கிராமத்தைச் சேர்ந்தவர் பொய்யாழி (44). ஆடு மேய்க்கும் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி குருமாரி (38). இவர்களது மகன் மலையரசன் என்ற மருது (18). ஒன்பதாம் வகுப்பு படித்துவிட்டு ஆந்திர மாநிலத்தில் ஸ்வீட் கடையில் வேலை பார்த்து வந்தார். மேலும் 2 மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் மருது கடந்த 3 நாட்களுக்கு முன்பு தீபாவளி கொண்டாடுவதற்காக ஆந்திர மாநிலத்தில் இருந்து அயன்செங்கல்படை கிராமத்திற்கு வந்தார்.
தீபாவளியன்று, தந்தை பொய்யாழியுடன் செங்கல்படை கிராமத்தில் உள்ள கண்மாயில் குளிப்பதற்காக சென்றார். இருவரும் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து குருமாரி மற்றும் உறவினர்கள் கண்மாய்க்கு சென்று தேடியபோது கரையோரம் இருவரது உடைகள் இருப்பதைப் பார்த்து திடுக்கிட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கண்மாயில் இறங்கி 2 பேரின் உடல்களை மீட்டனர். நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே பெருமணல் கிராமத்தைச் சேர்ந்தவர் கென்னடி. இவரது மகன் ரூசோ (11). அங்குள்ள பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.
அதே ஊரைச் சேர்ந்த செல்வன் மகன் சந்தியாகு ராயப்பன் (11). 5ம் வகுப்பு படித்து வந்தான். இருவரும் நேற்று முன்தினம் காலை கடலில் குளிக்கச் சென்றனர்.திடீரென்று ராட்சத அலை இருவரையும் இழுத்துச் சென்றது. அங்கிருந்த மீனவர்கள், இருவரையும் காப்பாற்ற முயன்றனர். அதற்குள் ஆழமான பகுதிக்கு அலையால் இழுத்துச் செல்லப்பட்டு பலியாகினர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி