வாஷிங்க்டன் : ஈரான் மீதான பொருளாதார தடைகளில் இருந்து இந்தியாவுக்கு மேலும் சில சலுகைகளை அமெரிக்கா வழங்கி உள்ளது. ஈரானில் உள்ள சாபஹார் துறைமுகத்தில் வளர்ச்சிப் பணிகளை தொடரவும் அங்கிருந்து ஆப்கானுக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகளை மேற்கொள்ளவும் இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி வழங்கி உள்ளது. போரால் பாதிக்கப்பட்ட ஆப்கனின் மறு கட்டுமானத்திற்கு உதவுவதுடன் தெற்கு ஆசியாவில் இந்தியாவுடனான நல்லுறவை தொடரவும் அமெரிக்கா விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் ஈரான் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை அதன் நெருங்கிய கூட்டாளியான ஐரோப்பிய ஒன்றியம் புறக்கணித்துள்ளது. இது குறித்து பேசிய ஜெர்மனி வெளியுறவுத் துறை அமைச்சர், ஹெய்கோ மாஸ், அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை பின்பற்றப் போவதில்லை; இவ்வாரம் அமலுக்கு வரும் தடைகளால் ஈரான் பொருளாதாரம் மேலும் பலவீனமாகாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்; ஏனேனில் ஈரான் அரசு பலவீனமாகி அங்கு நிச்சயமற்ற நிலை உருவானால், சமூக விரோத சக்திகளுக்கு ஊக்கம் தருவதாக அமைந்துவிடும்,இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே பொருளாதார தடைகளை மீறுவதுடன் அமெரிக்காவின் முடிவிற்கு மாறாக ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை தொடரவும் ஐரோப்பிய ஒன்றியம் உறுதி அளித்துள்ளது. இதனால் ஈரானை தனிமைப்படுத்தி மிரட்டி பணியவைக்கும் ட்ரம்பின் திட்டம் பலன் தருவது கேள்வி குறியாகி உள்ளது
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி