திண்டுக்கல்: தமிழகம் - மத்திய பிரதேசம் அணிகளிடையே நடந்த ரஞ்சி கோப்பை பி பிரிவு லீக் ஆட்டம் டிராவில் முடிந்தது. என்பிஆர் கல்லூரி மைதானத்தில் நடந்த இப்போட்டியில், டாசில் வென்று பேட் செய்த மத்திய பிரதேச அணி முதல் முதல் இன்னிங்சில் 393 ரன் குவித்து (157.4 ஓவர்) ஆல் அவுட்டானது. பத்திதார் 196 ரன் (406 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். தமிழக அணி பந்துவீச்சில் அஷ்வின், முகமது தலா 4 விக்கெட், விஜய் ஷங்கர், ரகில் ஷா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். முகது ஹாட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.
மூன்றாம் நாள் ஆட்டம் கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், 4வது மற்றும் கடைசி நாளான நேற்று தமிழக அணி முதல் இன்னிங்சை தொடங்கி விளையாடியது. தொடக்க வீரர்கள் அபினவ் முகுந்த் 28 ரன், முரளி விஜய் 21 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். அபராஜித் 31 ரன்னில் வெளியேறினார். விஜய் ஷங்கர் 17 ரன் எடுத்தார். ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும், உறுதியுடன் விளையாடிய கேப்டன் இந்திரஜித் சதம் விளாசினார்.
தமிழக அணி 77.4 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 236 ரன் எடுத்த நிலையில், போட்டி எத்தரப்புக்கும் வெற்றி, தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்திரஜித் 103 ரன் (184 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்), அனிருத் 28 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மத்திய பிரதேச பந்துவீச்சில் ஆவேஷ் கான் 2, அங்கித் ஷர்மா, மிஹிர் ஹிர்வானி தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இரு அணிகளும் தலா 1 புள்ளி பெற்றன. குஜராத் வெற்றி: பரோடா அணியுடன் வதோதராவில் நடந்த ஏ பிரிவு லீக் ஆட்டத்தில் குஜராத் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது.
முதல் இன்னிங்சில் பரோடா 290 ரன், குஜராத் 302 ரன் எடுத்தன. 12 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய பரோடா அணி 179 ரன்னில் சுருண்டது. பினால் ஷா 71, யூசுப் பதான் 28, ஷேத் 27, வாக்மோட் 26 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் கணிசமாக ரன் குவிக்கத் தவறினர். அடுத்து 168 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத், 48.2 ஓவரில் 1 விக்கெட் மட்டும் இழந்து வெற்றியை வசப்படுத்தியது. கோஹெல் 22 ரன் எடுத்து ரன் அவுட்டானார். கேப்டன் பாஞ்சால் 112 ரன், மெராய் 33 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். குஜராத் அணி 6 புள்ளிகளை தட்டிச் சென்றது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி