சென்னை: டி.டி.வி.தினகரன் போன்ற நரகாசூரர்கள் அதிமுகவை அழிக்கப்பார்க்கின்றனர். அவ்வாறு செயல்பட்டவர்கள்தான் அழிந்து போய் இருக்கிறார்கள் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.சென்னை ராயப்பேட்டையில் நேற்று அதிமுக ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு பிறகு அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: நரகாசூரர்கள் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை. வரம் கொடுத்த சிவன் தலையிலேயே கை வைத்தவர்கள் தான் நரகாசூரர்கள். அதைபோல் எந்த இயக்கம் டி.டி.வி. தினகரன் மற்றும் அவர்களுடன் இருப்பவர்களை அடையாளம் காட்டியதோ? எந்த இயக்கத்தால் உண்டு, கொழுத்து வளர்ந்தார்களோ?அந்த இயக்கத்தை அதிமுக அழித்து விடலாம் என்று செயல்பட்டவர்கள் இன்றைக்கு அழிந்து போய் இருக்கிறார்கள்.
தமிழகத்தில் மருத்துவ அபாயம் ஏற்பட்டு இருப்பதாக மு.க.ஸ்டாலின் கூறியிருக்கிறார். திமுக ஆட்சியில் தான் டெங்கு காய்ச்சல் அதிகமாக இருந்தது. ஆனால் இன்றைக்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். எப்போது வேண்டுமானலும் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவிக்கலாம். எங்களை பொறுத்தவரையில் கட்டி முடிக்கப்பட்ட கோபுரங்களாக இருக்கிறோம். நாங்கள் தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் தான் நிர்ணயிக்க வேண்டும். எங்களுக்கு டெபாசிட் கிடைக்காது என்று டி.டி.வி. தினகரன் கூறுவது குப்புற விழுந்தும் கூட மீசையில் மண் ஓட்டவில்லை என்று சொல்வது போல. எங்களை பொறுத்தவரையில் ஒற்றுமையுடன் எதிரிகளை தகர்த்து எறிந்து வெற்றியை பெறுவோம். வேட்பாளர்களை ஆட்சி மன்ற தேர்தல் குழு முடிவு செய்யும். 20 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதற்கான வியூகம் அமைத்து இருக்கிறோம். அதை இப்போது சொல்ல முடியாது. டி.டி.வி. தினகரனை தவிர வேறு யார் வேண்டுமானாலும் அதிமுகவுக்கு மீண்டும் திரும்பலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி