ராமேஸ்வரம்: பாம்பன் மீனவர்கள் வலையில் 350 கிலோ எடையுள்ள சுறா மீனும், ஆளை கொல்லும் ஆபத்தான அஞ்சாலை மீனும் சிக்கியது. ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் கடற்கரையிலிருந்து நேற்று முன்தினம் நூற்றுக்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் மீன் பிடித்தபோது மீனவர் ஒருவரின் வலையில் 350 கிலோ மெகா சைஸ் சுறாமீன் பிடிபட்டது. இரவு முழுவதும் மீன் பிடித்த மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். கரைக்கு எடுத்து வரப்பட்ட சுறா மீன் மற்றும் பலவகை மீன்களை வியாபாரிகள் போட்டி போட்டு நல்ல விலைக்கு வாங்கி சென்றனர்.
மேலும், பாம்பன் மீனவர் ஒருவரின் வலையில், மலைப்பாம்பை போன்ற தோற்றம் உடைய அரிதான கொடிய விஷம் உள்ள அஞ்சாலை மீன் சிக்கியிருந்தது. வேகமாக நீந்தும் தன்மை கொண்ட அஞ்சாலையிடம் மனிதர்கள் சிக்கினால் தனது அகன்ற வாயினால் கடித்து குதறி விடும். எலும்பை மட்டும் விட்டு விட்டு சதைப்பகுதியை தனியாக கடித்து எடுத்து விடும் தன்மை கொண்டது. அதிக விஷத்தன்மை கொண்டதாகவும் இருப்பதால் மனிதர்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்க கூடியது. மூன்று அடி நீளத்தில் கரும்புள்ளிகளுடன் சிக்கிய அஞ்சாலை மீன் வலையில் பிடிபட்ட சில மணி நேரங்களில் உயிரிழந்ததால், இதனை மீனவர்கள் கடற்கரையிலே விட்டு சென்றனர்.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி